பிரேமதாச காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம் சறுக்கி போனதன் காரணமாக ஈழவர் ஜனநாயக முன்னணியான ஈரோஸ் தனது 13 ஆசனங்களை தூக்கி ...
பிரேமதாச காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம் சறுக்கி போனதன் காரணமாக ஈழவர் ஜனநாயக முன்னணியான ஈரோஸ் தனது 13 ஆசனங்களை தூக்கி எறிந்துவிட்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தது என அக்கட்சியின் செயலாளர் இரா.பிரபாகரன் தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்
தமிழ் மக்களுக்காக போராடிய ஆயுதக்குழுக்கள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கால்வைத்து மக்களின் அதிகப்படியான ஆதரவைப் பெற்று பாராளுமன்றம் சென்ற கட்சியாக ஈழவர் ஜனநாயக முன்னணி பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக ஓங்கி ஒலித்ததை யாரும் மறந்துவிட முடியாது
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் காத்திரமான நிலைப்பாட்டைக் கொண்ட எமது கட்சி தமிழ் மக்களுக்கு எதிரான விரோதமான செயற்பாடுகளை பாராளுமன்றத்தில் அரங்கேற்ற முற்பட்ட போது எமது மக்களுக்காக எமது பிரதிநிதித்துவங்களையே தூக்கி எறிந்தோம் ஆனால் தற்போதைய தமிழ் கட்சிகள் மக்களின் ஆணைகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற போதும் அம் மக்களுக்கு எதிராக அநீதிகள் நடைபெறும் போது அதனை வேடிக்கை பார்ப்பதும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சுகபோகங்களையும் தவறாமல் பயன்படுத்துகின்றனர்
1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்த எமது ஈரோஸ் அமைப்பு மலையக மக்களின் வாக்குரிமையை பெறுவதற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கியது.
இதற்கு பிற்பட்ட காலங்களில் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஈரோஸ் அமைப்பானது தற்போது தேர்தலில் களமிறங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது
தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரப் போகிறோம் என கூறி வருபவர்கள் தமிழ் மக்களுக்காக எதைச் சாதித்தார்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்விகள் எழும் நிலையில் தமிழ் மக்களுக்காக விலைபோகாமல் தமது பாராளுமன்ற பதவிகளையே தூக்கி எறிந்த நாம் இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய காலத்தில் உள்ளோம்.
சிலர் மாற்றுத் தலைமை வேண்டும் என்கிறார்கள் நாம் மாற்று தலைமையை கோரவில்லை பசி பட்டினியால் வாடும் மக்களையும் மாற்றுத்திறனாளிகள் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிக்கப்பட்ட விதவைகள் ஆகியோரின் வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் ஒரே நேர்கோட்டில் வைத்து செய்யப்படும் எமது கட்சி அபிவிருத்திக்கு முதன்மை கொடுத்து செயல்படுத்தி வருகிறது.
தேசியம் என்பது எமது தீர்வல்ல அடையாளம், தேசிய இறைமையை பாதுகாப்பதே எமது நோக்கமாகும்.
தேசியம் பேசித் தீர்வு காண்பதற்கு தெரியும் தமக்கு தீர்வு கிடைக்காது என்று இருந்தும் மக்களை உசுப்பேத்தி தமது ஆசனங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறான நடை முறைகளை பின்பற்றுகிறார்கள். மாற்றம் வேண்டும் என்பது கட்சியையோ வேட்பாளரையோ அல்ல தமிழ் மக்களுக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக வர முடியாது என்ற கணிப்பை மூழ்கடித்த ஒபாமாவும் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனையை கொண்டுள்ள அமெரிக்காவை தனது தாய் ஒரு முஸ்லிம் இனத்தவர் என்பதை அடையாளப்படுத்தி அமெரிக்காவின் ஜனாதிபதியாக சரித்திரத்தைப் புரட்டிப் போட்டவர் ஒபாமா.
அப்படிப்பட்ட மாற்றம் என்பது மக்களுக்கு நிறத்தையோ இனத்தையோ பெரிதாக எண்ணத் தோன்றாமல் ஒபாமா என்கின்ற நபர் அந்த நாட்டுக்கு கொடுத்த சக்தியின் வெளிப்பாடே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஒரு காரணமாகும்
ஆகவே தான் நாமும் தமிழ் மக்களுக்காக போராடியவர்கள் என்ற ரீதியிலும் ஜனநாயக தேர்தல் மூலம் பாராளுமன்றத்தை அதிகப்படியான ஆசனங்களை அலங்கரித்தவர் என்ற ரீதியிலும் தமிழ் மக்கள் இம்முறை எமது கட்சிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.