தேங்காய் எண்ணை உற்பத்திகளால் அபிவிருத்தி அடையவுள்ள மட்டுவில் சந்திரபுரம் சௌபாக்கியா உற்பத்தி கிராமம். சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வறுமை ஒழிப...
தேங்காய் எண்ணை உற்பத்திகளால் அபிவிருத்தி அடையவுள்ள மட்டுவில் சந்திரபுரம் சௌபாக்கியா உற்பத்தி கிராமம்.
சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வறுமை ஒழிப்பு திட்டமானது சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் மட்டுவில் சந்திரபுரம் பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் அவர்கள்,
“ஒரு கிராமம் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடையும்போது அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். இந்த நிதிஒதுக்கீட்டை பயன்படுத்தி தொழில்துறையை வளர்த்து இலாபத்தை பன்மடங்காக அதிகரிக்கவேண்டும். அந்த இலாபமூடாக இதனை நம்பி வாழும் பயனாளிகளின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கவேண்டும். பாரிய முன்னேற்றங்கள் அனைத்தும் சிறிய முயற்சிகளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. மட்டுவில் கத்தரிக்காய் எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்கு மட்டுவில் தேங்காய் எண்ணையும் பிரபலமடைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர், பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இத்திட்டத்தை செயற்படுத்தும் மாதர்சங்க பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.