நாட்டில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில், நோய் அறிகுறிகள் இன்றி வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் தொற்றாளர்களின் ஒக்சிஜன் அளவை அறிந்த...
நாட்டில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில், நோய் அறிகுறிகள் இன்றி வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் தொற்றாளர்களின் ஒக்சிஜன் அளவை அறிந்துக்கொள்வதற்கு தேவையான ‘பள்ஸ் ஒக்சிமீடர்ஸ்” கருவியை நோயாளர்களுக்கு வழங்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து, சிகிச்சை வழங்கும் நடைமுறை நேற்று (09) முதல் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
மேல் மாகாணத்தில் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வெற்றியளித்துள்ள நிலையிலேயே, நாடு முழுவதும் இந்த நடைமுறையை அமுல்படுத்த சுகாதார பிரிவினர் தீர்மானித்திருந்தனர்.
நாடு முழுவதும் வீரியம் கொண்ட டெல்டா வைரஸ் பரவல் காணப்படுகின்றமையினால், ஒக்சிஜனின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது.
இந்த நிலையி;ல், வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் ஒக்சிஜனின் அளவை கணிப்பிடுவதற்கான கட்டாயம் எழுந்துள்ள பின்னணியிலேயே, சுகாதார அமைச்சர் ‘பள்ஸ் ஒக்சிமீடர்ஸ்” கருவியை நோயாளர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
நபரொருவரின் ஒக்சிஜன் அளவு 80 – 90 வரை காணப்பட வேண்டும் என்பதுடன், அதைவிட ஒக்சிஜனின் அளவு குறையுமாக இருந்தால், உடனடியாக வைத்தியரின் உதவியை நாட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், அவர்களுக்கான சிகிச்சைகளை உரிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளார்.
நோயாளர்களுக்கு தேவையான இந்த கருவியை விரைவில் நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நோயாளர்களுக்கு வழங்கப்படும் இந்த கருவி, நோயாளரின் பயன்பாட்டு தேவை நிறைவடைந்ததன் பின்னர், சுகாதார பிரிவினரால் மீண்டும் பெற்றுக்கொள்ளப்பட்டு, மற்றுமொரு நோயாளருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.