பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அறைகூவல் விடுத்துள்ளார் அவர் ஊடகங்களுக்கு இ...
பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அறைகூவல் விடுத்துள்ளார்
அவர் ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதுள்ள அரசு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்க முடியாதவாறு பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டது.
இந்த அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் எமது அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை.
மாவீரர்களை, இறந்த எம் உறவுகளை நினைவுகூர்ந்து ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்யக்கூட முடியாதவர்களாக தமிழ் இனம் வஞ்சிக்கப்படுகிறது.
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போதும் குரல்வளையை அரசு நசுக்கி இது ஒரு சிங்கள நாடு என்ற செய்தியை அடித்துச் சொல்லி நிற்கிறது.
இவை எல்லாவற்றிற்கும் எதிராக நாமும் ஓர் தேசிய இனம். அஞ்சலி செய்தல், நினைவேந்தல் செய்தல் என அனைத்திற்கும் எமக்கு உரிமை உண்டு.
இது எமது அடிப்டை சுதந்திரம் என்ற செய்தியை உரக்க சொல்ல நாளைய தினம் வடக்கு, கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கின்றேன்.
குறிப்பாக இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கில் உள்ள அரச, தனியார் நிறுவனங்கள், அரச, தனியார் போக்குவரத்து கழகங்கள், வங்கிகள், வர்த்தக சங்கங்கள், பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சேவைச் சந்தைகள், கிராமமட்ட அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் என அனைவரும் நாளைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது