யாழ் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையினரின் சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்த்துறையின் சீருடையை ஒத்ததாக காணப்படுவதாக கூறி, அவற...
யாழ் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையினரின் சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்த்துறையின் சீருடையை ஒத்ததாக காணப்படுவதாக கூறி, அவற்றை யாழ்ப்பாண பொலிசார் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர்.
யாழ் மாநகர காவல்ப்படையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெறவிருந்த நிலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
யாழ்ப்பாண மாநகரத்தை சுத்தமாக வைத்திருப்பது, போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்வது, தண்டப்பணம் அறவிடுவது உள்ளிட்ட பணிகளிற்காக ஐந்து பேரைக் கொண்ட மாநகர காவல்படையை, முதல்வர் வி.மணிவண்ணன் உருவாக்கியிருந்தார்.
காவல்படையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (8) இடம்பெறவிருந்தது. இதற்கு முன்னோடியாக, நேற்று அவர்கள் நல்லூரை அண்மித்த பகுதியில் வீதியில் ஏற்பட்ட சிக்கலொன்றை சரி செய்தனர்.
இந்த புகைப்படங்கள் வைரலானது.
இதையடுத்து, நேற்று யாழ் மாநகர ஆணையாளரிடம் யாழ்ப்பாண பொலிசார் விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றனர்.
மாநகர காவல்ப்படையின் சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்த்துறையின் சீருடையை ஒத்ததாக இருப்பதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, மாநகர காவல்படையின் 5 உறுப்பினர்களும் நேற்றிரவு யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோரும் பொலிஸ் நிலையம் சென்றனர்.
நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையும் மாநகரகாவல்படையினரிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றனர்.
மாநகர காவல்படையின் சீருடை விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்ததாக காணப்படுவதாகவும், மேலிட உத்தரவுப்படி இந்த விசாரணையை நடத்துவதாகவும் யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்தனர்.
மாநகர காவல்ப்படையினரின் சீருடைகளையும் பொலிசார் பெற்றுக் கொண்டுள்ளனர். விசாரணை முடிந்து, மேலிட ஆலோசனையின் பின்னர் அவற்றை கையளிப்பதாக தெரிவித்துள்ளனர்.