மன்னாரில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்று மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. மன்னார் பொது சுகாதார ...
மன்னாரில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்று மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசேதகர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீர் என சென்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த வெதுப்பகத்தில் உடல் நலத்திற்கு ஒவ்வாத வகையில் பொருட்களை களஞ்சியப்படுத்தியமை, அங்கு கடமையாற்றுபவர்கள் சிலர் தனி நபர் சுகாதாரத்தை கடைப்பிடிக்காமை, காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக நேற்று மன்னார் நீதிமன்றத்தில் பொது சுகாதார வைத்திய அதிகாரியினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வெதுப்பகத்தின் உரிமையாளர் குற்றத்தை ஒப்புக் கொண்டமைக்கு அமைவாக 25000 ரூபாய் அபராதத்தை செலுத்துமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்று உத்தரவிட்டார்.
மேலும் நீதி மன்றத்தின் மறு அறிவித்தல் வரை குறித்த வெதுப்பகத்தை சீல் வைத்து மூடுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.