எமது அலுவலகத்தினால் உங்களுக்கு கிடைக்கும் உதவித் திட்டங்களினால் உங்கள் வலிகளை போக்க முடியாது. அதனால்தான் நாம் உதவி திட்டங்களை வழங்குவதை மட்...
எமது அலுவலகத்தினால் உங்களுக்கு கிடைக்கும் உதவித் திட்டங்களினால் உங்கள் வலிகளை போக்க முடியாது. அதனால்தான் நாம் உதவி திட்டங்களை வழங்குவதை மட்டும் நாம் செய்யவில்லை. எமது பணியகத்தின் பிரதான பணியாக காணாமல் ஆக்கப்பட்ட நபருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பதே என காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பான மாவட்டச் செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பணியக தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
காணாமல் ஆக்கப்பட்டவர்களுககவே இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. நாம் யாழ்ப்பணத்தில் புதிதாக இன்று திறந்து வைத்த அலுவலகத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த அலுவலகம் வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்ததுடன் திறப்பதை தடுப்போம் என்று அச்சுறுத்தலுடன் கூடிய எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனினும் இந்த அலுவலகத்தினை எதிர்ப்பவர்களின் உரிமையை மதிக்கின்றோம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் வேண்டும் என எம்முடன் செயற்படுகின்ற உறவுகளுக்கு தடையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை அரசு ஐ.நா மனித உரிமை பேரவையில் இவ்வாறான அலுவலகம் ஒன்றை திறப்போம் என இணங்கியதற்கு அமையவே இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெறுமனே சர்வதேசத்தை சந்தோசப்படுத்த மட்டும் திறக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான விடயங்களை நிறைவேற்றவே இந்த அலுவலகம் செயற்படுகின்றது என்றார்.




