பிணை முறிமோசடி விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும். முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை விட, ...
பிணை முறிமோசடி விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும். முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை விட, இன்னும் பெரியவர்களை தண்டிக்க குற்றப்பத்திரம் தயாராகி வருவதாக அதிரடி அறிவித்தல் விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
கொழும்பில் இன்று இடம்பெறும் சுதந்திரக்கட்சியின் 68வது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
2020ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் அமைக்கப்படும். 2020 இல் பிரதமரே அதிகாரம் மிக்கவர், அதனால் ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிக அக்கறை செலுத்தவில்லை. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசாங்கம் அமைக்கப்படும் என்றார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மோசடி மற்றும் ஊழல் இல்லாத ஒரு அரசாங்கம் என்ற பெருமையை ஸ்ரீ.ல.சு.க. கொண்டுள்ளது. மக்களை மையமாகக் கொண்ட மற்றும் முற்போக்கான அரசாங்கத்தை சு.க அமைக்கும். இது அனைத்து சமூகங்களுக்கும் பொருத்தமான சூழலை உருவாக்கும்.
19 ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை கணிசமாக குறைத்துள்ளதால், பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அரசியலிலும், அரசுத் துறையிலும் ஊழல் பரவலாக உள்ளது. பாராளுமன்றம் முதல் உள்ளூராட்சி அதிகாரிகள் வரையான அதிகார படிநிலைகளில் குறைந்தது 90 சதவீதம் ஊழல் நிறைந்தவை.
2015 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மோசடியில் சிக்கிய அவருக்கு மேலானவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர கூடுதல் ஆவணங்கள் தயாராக உள்ளன என்றார்.
மாகாணசபை தேர்தலை நடத்தாமைக்கான பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்க வேண்டும் என்றார். மாகாண எல்லைகளை மீள் நிர்ணய அறிக்கையை, பிரதமர் ரணில் தலைமையிலான குழு சமர்ப்பிக்காததை சுட்டிக்காட்டினார்.
2015 ஆம் ஆண்டில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் ஊழல் நிறைந்த மேற்தட்டு வர்க்கத்தை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் அமைப்பை தோற்கடிக்கும் ஒரு சக்தியை வழங்குமாறும் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.