வடக்கு , கிழக்கில் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குரிய சந்தர்பத்தை வழங்க வேண்டுமென பிரதமரின் கூட்டத்தில் மூத்த வீரர்கள் பலரும் க...
வடக்கு , கிழக்கில் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குரிய சந்தர்பத்தை வழங்க வேண்டுமென பிரதமரின் கூட்டத்தில் மூத்த வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உரிய வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்” என இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், “வட மாகாணத்தில் 26 பாடசாலைகள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கென முழுமையான மைதானத்துடன் ஓரு ஆடுகளம் மாத்திரமே உள்ளது. வடக்கு கிழக்கை எடுத்துக்கொண்டால் யுத்தத்தின் பின்னர் அங்கு திறமையான சிறுவர்கள், சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் இன்னும் அதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அது தொடர்பில் நமக்கும் பொறுப்புள்ளது என்றே நான் நினைக்கின்றேன்” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
“வடக்கு, கிழக்கில் போட்டித் தொடர்களை நடத்திய போது ஆற்றல்கள் மிக்க பல வீரர்கள் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்ததது எனினும், அவர்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளது” என இந்த கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட, இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
” சங்கா கூறியதைப் போல் நானும் வடக்கிற்கு சென்றபோது இவற்றை அவதானித்தேன். வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள் போதாது அங்கிருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கப்பட வேண்டும், வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” என இந்தக் உரையாடலில் பங்குகொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.