ஹட்டன், டிக்கோயா மணிக்கவத்தை 3ஆம் பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (09) மதியம் தீ பரவியதில், 07 வீடுகள் முற்றாக எரிந்த
ஹட்டன், டிக்கோயா மணிக்கவத்தை 3ஆம் பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (09) மதியம் தீ பரவியதில், 07 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இதனால் 89 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ள நிலையில், இவர்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டிக்கோயா குடியிருப்பில் தீ விபத்து |
ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர் தீ பரவல் ஏற்பட்டதால், மக்கள் பதறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவந்தனர்.
இதனையடுத்து பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.
இத்தீ விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத போதிலும், பெருமளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.