ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினாலேயே சமகி ஜன பலவேகய எனப்படும் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளதாக, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்...
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினாலேயே சமகி ஜன பலவேகய எனப்படும் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளதாக, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்படி, கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த கூட்டத்தின்போது, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், வேட்புமனுக்களைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் அடிப்படையில், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினாலேயே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு ஐக்கிய தேசிய கட்சி தரப்பினருக்கும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற தடை விதிக்கவோ, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் இந்த விடயத்தை சட்டரீதியாக நிரூபிக்கவும் தான் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த காரணங்களின் அடிப்படையில், ஐக்கிய தேசிய கட்சியின் சகல உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அதற்கு எந்தவிதமான தடைகளும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.