2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் போது ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக குற்றச்சாட்டை முன்வைக்கும் முன்னாள் நாடாளுமன்...
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் போது ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக குற்றச்சாட்டை முன்வைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே அது தொடர்பான ஆதாரங்களையும் வெளிப்படுத்த வேண்டுமென அந்த போட்டியில் விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்டன.
மும்பையில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கட்களால் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் குறித்த போட்டியின் போது ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட மஹிந்தானந்த அழுத்கமகே குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தியாவுடனான இறுதிப் போட்டியை வெற்றி பெறுவதற்கான இயலுமை இலங்கை அணிக்கு காணப்பட்டது.
எனினும் பணத்திற்காக குறித்த போட்டி தாரை வார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே கூறினார்.
இறுதி போட்டியில் விளையாடவிருந்த அணி தேர்வுகுழுவின் ஊடாக பெயரிடப்பட்டு அமைச்சருக்கு அனுப்பப்பட்டது.
எனினும் அன்றைய தினம் இந்தியா சென்று போட்டியை பார்க்கும் போது பெயரிடப்பட்ட அணி வீரர்கள் விளையாடவில்லை.
4 வீரர்கள் புதிதாக அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர்
இறுதி தருணத்தில் இலங்கையில் இருந்து இரண்டு வீரர்கள் அழைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் அங்கு அழைப்பதற்கு தேர்வு குழுவின் அல்லது அமைச்சரின் அனுமதி பெறப்படவில்லை.
இறுதி வீரர்கள் மாற்றப்பட்டமை முதல் பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
எனவே 2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக பாரிய சந்தேகம் நிலவுகின்றது.
அந்த சந்தர்ப்பத்தில் ஆட்ட நிர்ணய சதிக்கு எதிரான சட்டம் எமது நாட்டின் சட்ட திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து ஆட்ட நிர்ணய சதிக்கு எதிரான சட்டத்தை உருவாக்குவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் செயற்பட்டேன்.
எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து தகவல்களையும் உரிய தரப்பினருக்கு வழங்கியுள்ளோம்.
இது தொடர்பான முழுமையான விசாரணை நடைபெறும் வரையில் தவறிழைத்தவர் எவர் என வெளிப்படுத்த முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அந்த போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தினால், அதனுடன் சம்மந்தப்பட்டவர்களின் விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
இதேவேளை 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ணக் கிரிக்கெட் போட்;டியின் இறுதி போட்டியின் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என
அந்த போட்டியில் உபதலைவராக பணியாற்றிய மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தலை மையப்படுத்தி இவ்வாறான கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றதா? என்ற சந்தேகம் நிலவுவதாகவும் மஹேல ஜெயவர்த்தன தமது டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இது தொடர்பான ஆதாரங்கள் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்பு பிரிவில் முன்வைக்கப்பட வேண்டும் என அந்த சந்தர்ப்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய குமார் சங்கக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த விடயத்தில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளியாகும் எனவும் குமார் சங்கக்கார தெரிவித்தார்.