இலங்கையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாது யாராவது இருந்தால் அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் காணாமல் போனவர்கள் என்று எவரும்...
இலங்கையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாது யாராவது இருந்தால் அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை என்று சவேந்திர சில்வா கூறியிருப்பது கண்டனத்திற்குரியதாகும் என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் காணாமல் போனவர்கள் சம்பந்தமாக பல சாட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
காணாமல் போனோர் விவகாரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு இருக்கின்ற சாட்சிகள் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தங்களது சாட்சியங்களை முன்வைத்து உள்ளன எனினும் சிங்களப் பேரினவாத அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பற்ற பதிலையே தொடர்ச்சியாக கூறி வருகின்றனர் அதிலும் மஹிந்த ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்க இருக்கட்டும் மைத்திரிபால சிறிசேனவை இருக்கட்டும் விமல் வீரவன்ச இருக்கட்டும் அனைவரும் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்று கூறி வருகின்றனர் இவர்களின் கருத்து கண்டனத்துக்குரியதாகும்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது ஏராளமான தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சாட்சிகள் இருக்கின்றன அதேபோல இறுதி யுத்தத்தில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட நாம் வடக்கு மாகாணசபையில் இன அழிப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தோம். இதனாலேயே நாம் இன்றுவரை சர்வதேச விசாரணையை கோரி வருகின்றோம்.
மேலும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை இலக்கத்திலேயே தங்களது ஆசனங்களை பெற்றுக் கொள்வார்கள் அவர்கள் எதிர்பார்ப்பது போல் இருபது ஆசனம் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. எமக்கான பலத்தை மக்கள் இம்முறை தர வேண்டும் நாம் இம்முறை பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்க தமிழ் மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.