நாட்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய நிறைவான ஆட்சி அமைய வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ...
நாட்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய நிறைவான ஆட்சி அமைய வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியினர் யாழ்ப்பாணத்தில் தமது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க முன்னர் சர்வமத தலைவர்களையும் சந்தித்து அவர்களது ஆசிகளை பெற்றுக்கொண்டனர். அத்துடன் அவர்களிடம் உள்ள எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்கள்.
அந்தவகையில் சர்வமத தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்,
கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர், சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து மேற்கொண்ட முயற்சியினால் இந் நிலைமை சாத்தியமாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் மக்களுக்கு ஒரு நிம்மதியான தன்னிறைவான வாழ்க்கை கிடைக்குமளவுக்கு அவர்களை வலுப்படுத்தும் ஒரு ஆட்சியமைக்க வேண்டும்.
அதேவேளை எமது கட்சி இம்முறை பரந்துபட்டளவில் வேட்பாளர்களை தெரிவு செய்து முன்மாதிரியாக செயற்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு தரப்பினரையும் எமது கட்சிக்குள் உள்வாங்கியமைக்கு மதத் தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர் என்றார்.