சுகாதார விடயங்கள் திருப்தியானதால் நெல்லியடிச் சந்தை மீளத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றிற்கு ஏதுவாக பல்வேறு சுகாதாரக...
சுகாதார விடயங்கள் திருப்தியானதால்
கொரோனா நோய்த்தொற்றிற்கு ஏதுவாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கிய நெல்லியடி பொதுச் சந்தை நேற்று முன்தினம் சுகாதார திணைக்களத்தினரால் மூடப்பட்டது.
இதன் பின்னர் இன்று நெல்லியடிச் சந்தை வளாகத்தில் பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச செயலர், சுகாதார வைத்திய அதிகாரி, நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வியாபாரிகளின் பிரநிதிகளுடன் அவசர கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன் பின்னர் குறைபாடுகளாகக் காணப்பட்ட கை கழுவும் வசதிகள் திருப்தியின்மை, சமூக இடைவெளிகளைப் பேணாமை, பொதுமக்களும் விற்பனையாளர்களும் முகக் கவசம் அணியாமை, சந்தையினுள் ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்படாமை மற்றும் சந்தையினுள் சமூக இடைவெளிக்கான அடையாளங்கள் இடப்படாமை போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனை அடுத்து நாளை முதல் சந்தை வழமை போல் இயங்கும் எனவும் இதனைக் கண்காணிப்பதற்கு பிரதேச சபை தவிசாளர், ஐந்து பிரதேச சபை நிர்வாக உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலரின் பிரதிநிதி ஆகியோர் சில வாரங்களுக்குத் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் பொதுமக்களை இதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் அனைத்துத் தரப்பினராலும் கேட்டுக் கொள்ளப்பட்டது.