ஏதோ ஒரு இயலாமை. ஏதோ ஒரு விரக்தி. ஏதோ ஒரு திணித்த மௌனம். ஏதோ ஒரு மந்தையுணர்வு. ஏதோ ஒரு கசப்பைத் துப்ப முடியாத பரிதாபம். ஏதோ ஒரு பிரள...
ஏதோ ஒரு இயலாமை.
ஏதோ ஒரு விரக்தி.
ஏதோ ஒரு திணித்த மௌனம்.
ஏதோ ஒரு மந்தையுணர்வு.
ஏதோ ஒரு கசப்பைத் துப்ப முடியாத
பரிதாபம்.
ஏதோ ஒரு பிரளயத்தினை மனச்சாட்சியற்று
மறைத்தாடும் முகாரி.
ஏதோ ஒரு பெருங்கூட்டில்
அடைத்த பறவைக்கு சிறகு விரிக்கும் சிற்றுலக நரகம்.
வாழ்விடப் பறவைக்கும்
வலசைப் பறவைக்கும் கூட
பாடமுடியாத வாயடைப்பு.
சிறகுகள் இருந்தும் சிறகறுந்த நிலையோடு
மனம் அடைபட்ட பறவைகளாய்
கிளைகளில் இருந்து வேரைத்தேடும்
வெறுமையோடு நகர்கிறது காலம்.
எல்லாமே எல்லாமே
நீறுபூத்த நெஞ்சத்தில்
கிளற முடியாச் சாம்பலுக்குள்
புதைத்த பூசணிக்காயின்
ஆணத்தின் கசிவாய் , ஆங்காங்கே பொசுங்கிப் பொசுங்கி ,நசுங்கிச் சிதைய மௌனமாய் எரிகிறது வெறுமை.
இன்னும் ஏதோ ஏதோ தோன்றும் தீப்பிழம்புகளை வலிந்தடக்கும்
பரிதாபத்துக்கு சொந்தக்காரராகி
நகர்கிறது நாட்கள்.
மிளகாய்த் தோட்டத்தில் கிளிக்கூட்டத்தின்
படையெடுப்பாய்
இன்னும் அழகிய வேடத்தோடு
வஸ்துகள் ஆக்கிரமித்தல் செய்யும்
கையறு நிலைகண்டும்
கண்மூடிய தவப்பூனைகளாய்
கள்ளத் தவம் செய்யும் பரிதாபம்
நீள்கிறது தொடர் கதையாக.
ஏதோ ஒரு இயலாமை.
ஏதோ ஒரு விரக்தி.
ஏதோ ஒரு திணித்த மௌனம்.
ஏதோ ஒரு மந்தையுணர்வு.
ஏதோ ஒரு கசப்பைத் துப்ப முடியாத
பரிதாபம் நீடித்துக் கொண்டே இருக்கிறது
சாபத்தின் நீட்சியாக.....
லதா கந்தையா.