யுத்தம் நடைபெற்றபோது இங்கிலாந்தில் இருந்த கஜேந்திரகுமாரையும் போலித்தேசியம் பேசி வருகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் இம்முறை தமிழ் மக...
யுத்தம் நடைபெற்றபோது இங்கிலாந்தில் இருந்த கஜேந்திரகுமாரையும் போலித்தேசியம் பேசி வருகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் இம்முறை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் வேட்பாளருமான மு.றெமீடியஸ் கோத்தாபய அரசுடன் இணைந்து வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய எம்மைப் பலப்படுத்தவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக சொத்துக்களும் ஏராளமான உயிர்களும் இழக்கப்பட்டுள்ளன.இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்திலே ஏராளமான இளைஞர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கு கூட்டிச் செல்லப்பட்ட போது மனித உரிமை சட்டத்தரணியாக இருந்த நானே ஐந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்களை காப்பாற்றியிருந்தேன். ஆனால் இறுதிப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கிலாந்தில் சொகுசாக இருந்த கஜேந்திரகுமார் தரப்பினர் தற்போது போலித்தேசியம் பேசி வருகின்றனர் . அதனைக்கூட ஏற்றுக்கொண்டாலும் தமிழீழத்தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்து தேசியத்தலைவர் கஜேந்திரகுமாரே என்று அவருடன் இருப்பவர்கள் மேடைகளில் கூறிவருகின்றனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சர்வதேசம் சர்வதேசம் என்று கொக்கரித்து வருகின்றனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இருப்பவர்கள் தங்களது மனைவிமார் தயாரிக்கும் தேநீருக்கு இனிப்பு குறைவாக இருந்தாலும் அதற்கும் சர்வதேசத்திடம் முறையிடுவோம் என்றே கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இதை விட்டால் வேறு அரசியல் இல்லை.
இதேபோல தமித்தேசியக் கூட்டமைப்பினரும் போலித்தேசியம்பேசி மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்து வருகின்றனர்.கடந்த காலத்தில் ரணில் அரசுக்கு முண்டுகொடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து மாளிகைகளையும் சொத்துக்களையும் வாங்கி வைத்துள்ளனர்.
இவர்களை மக்கள் இனியும் ஏற்பார்களா நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டவேண்டும்.
ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசுடன் மக்களுக்குத் தேவையான விடையங்களை பேசி துரித அபிவிருத்திகளை முன்னெடுத்துவருகின்றார். அவரது கரங்களை பலப்படுத்த இம்முறை எமக்கு அதிக ஆசனங்களை வழங்கி மக்கள் பலமிக்க அணியாக எம்மை பாராளுமன்றம் அனுப்பி வைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.