இற்றைக்கு 50 வருடங்களைக் கடந்த கறுப்பு வெள்ளைத் திரைப்படமான The Battle of Algiers. 1966 இல் வெளிவந்த படமாகும். உலகப் புகழ் பெற்ற நெறியாளர...
இற்றைக்கு 50 வருடங்களைக் கடந்த கறுப்பு வெள்ளைத் திரைப்படமான The Battle of Algiers. 1966 இல் வெளிவந்த படமாகும்.
1950 இல் அல்ஜீரிய மண்ணில் காலடி பதித்த பிரன்சுப் படைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இளைஞர்கள் கரந்தடிப் போர் முறையான, மறைந்திருந்து தாக்கும் போரியலோடு ஆரம்பித்து , தமது சுதந்திர மீட்புக்காக போரிடுகிறார்கள். கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளையும் தகர்த்து இந்த விடுதலைப் போராட்டத்தில், முஸ்லீம் இளைஞர்களோடு பெண்களும் பங்கெடுத்த சிறப்பான வரலாற்றுப் பதிவை வெளிப்படுத்தும் படம் இதுவாகும்.
இதில் விசேடமாக இந்த முஸ்லீம் பெண்கள், சாதாரண முஸ்லீம் பெண்களைப் போலல்லாமல் பிரன்சுப் பெண்கள் போல குட்டையான முடியலங்காரமும் முக்காடும் நீக்கி, நடையிலும் உடையிலும் மாற்றத்தைஏற்படுத்தி, பூக்கூடைகளில் திட்டமிட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டுகளைக் காவிச் சென்று பிரஞ்சுப் படைகள் ஒன்று கூடுமிடங்களில் வெடிக்க வைக்கிறார்கள். ஒரு இன விடுதலைப் போருக்கு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியம் வாய்ந்தது என்பதை அல்ஜீரிய முஸ்லீம் பெண்கள் வாழ்ந்து காட்டிய வரலாற்றைச் சொல்கிறது இந்தப் படம்.
பிரன்சுப் படைகளும் இடைவிடாமல் விடுதலைப் போராளிகளை கொன்று குவிக்கின்றது. ஆனால் போராளிகளும் சளைக்காது போரிடுகிறார்கள்.இங்கு வியத்தகு விடயம் போராளிகளோடு மக்கள் நெருக்கமாக இருந்து பாதுகாத்து உணவளித்து காக்கின்றார்கள். மக்கள் தம் விடுதலைக்கான போர் என்பதை உணர்ந்த தன்மையை இந்தப்படம் எடுத்துக் காட்டுகிறது.
தமது மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளிகளை, பிரன்சுப்படை கைது செய்து மிகவும் கொடூரமான முறையில் சித்திரை வதை செய்கிறார்கள். கைதிகளாகப் பிடிபட்ட போராளியிடம் " உங்கள் பெண்கள் ஏன் பூக்கூடைகளில் குண்டு வைத்து கொல்கிறார்கள்" என்ற கேள்விக்கு
நீங்கள் வைத்திருக்கும் கெலிகொப்டரை தாருங்கள் பூக்கூடைகளை கைவிடுகிறோம் என துணிந்து பதில் கூறுகிறான் போராளி ஒருவன்
.
இறுதியில் போராட்டம் அடக்கப் படுகிறது. தலைவர்கள் மிகக் கொடூரமாகக் கொல்லப் படுகிறார்கள். பலர் புலம்பெயர்ந்தும், அரசியல் தஞ்சம் கோரியும்
வெளியேறுகிறார்கள். போராட்டம் முடிவுக்கு வருகிறது. எல்லாமே முடிந்து விட்டது என்ற வெறுமை உணர்வு மேலோங்கிக் காணப்படுகிறது.
இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, இந்த மக்களின் வாழ்வியலோடு ஒட்டிப் பிணைந்த குலவை ஒலியையும் சேர்த்து, படத்தின் பின்னணி இசையாக வைத்துள்ளமை. இயல்பான நடிப்பு. மிகைப்படுத்தப்படாத காட்சிகள். மிகைப்படுத்தப்படாத உரையாடல்கள்.
அத்தோடு இந்தப்படத்தில் பிரெஞ்சு இராணவத்தின கட்டளைத் தளபதி Colonel Mathieu ஆக நடிப்பது Jean Martin. அவர் ஒருவரே திரைப்படத்துக்காக நடிக்கும் நடிகர். மற்றவர்கள் அந்த நாட்டு மக்களே என்பது மிகச்சிறந்த படமாக காரணமாகியுள்ளது.
அதனால் தான் படம் உயிர்த் துடிப்போடு இன்றும் பேசப்படுகிறது.
விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் கொல்லப்பட்ட இரண்டு வருடங்களின் பின்னர் அடக்குமுறை அமைதியை உடைத்து, மக்கள் புரட்சி வெடிக்கிறது.
அல்ஜீரியா மண்ணுக்கு சுதந்திரமும் கிடைக்கின்றது.
இதில் இன்னொரு சிறப்பாக, மக்கள் விடுதலையையும் விடுதலைக்காய் உயிர் நீத்த விடுதலை வீரர்களின் கனவையும் மறக்கவில்லை. சோரம் போகாத மக்கள், விடுதலைக்காக போராடி உயிர் நீத்த போராளிகளின் தியாகங்களை மட்டுமே தம் மூச்சிலே சுமந்தமையுமாகும்.
அல்ஜீரிய மக்களின் விடுதலை எப்படி நடந்தது? எவ்வாறு நடந்தது என்பதெல்லாம் இயல்பாக நடந்தவையே. அவர்கள் தமக்காக உயிர்நீத்த போராளிகளின் கனவைச் சுமந்தார்கள். கனவைச் சுமக்கும் மக்களுக்கு
விடுதலை கிடைத்தே தீரும் என்பதற்கு அல்ஜீரிய விடுதலை சிறந்த எடுத்துக்காட்டு.
அதையே இந்தப் படமும் எடுத்துக்கூறுகிறது.
Latha Kanthaiya
(வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா)