இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக கொழும்பு வாழ் தமிழ் வர்த்தகர்கள் ஒன்று சேர்ந்து 12 கோடி ரூபாக்களை வழங்கினோம். ஆனால் தமிழ் மக்...
இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக கொழும்பு வாழ் தமிழ் வர்த்தகர்கள் ஒன்று சேர்ந்து 12 கோடி ரூபாக்களை வழங்கினோம். ஆனால் தமிழ் மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்ன செய்தார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் ப.வரதராஜசிங்கம் (விண்ணன்) கேள்வி எழுப்பினார்
இவ்வாறு பருத்தித்துறை நகரப்பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற இறுதி யுத்தம் நிறைவடைந்து மக்கள் அகதிகளாக வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்ட போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொழும்பு வாழ் தமிழ் வர்த்தகர்கள் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து 12 கோடி ரூபாய்களை அந்த மக்களுக்காக வழங்கியிருந்தோம். அதுமட்டுமல்லாது 20 நாட்களுக்கு மேலாக குறித்த முகாமில் தங்கி இருந்து அம் மக்களுக்கு தேவை எது என அறிந்து அதனை பெற்றுக் கொடுப்பதற்கு
வழிவகைகளையும்
ஏற்படுத்தினோம் .
இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அக்காலப்பகுதியில் வெளிநாடுகளிலும் கொழும்பிலும் தங்கள் குடும்பங்களுடன் தங்கியிருந்து தமது சுகபோக வாழ்க்கையை அனுபவித்தனர்.
தேசியம் சுயநிர்ணயம் தாயகம் என பேசும் தமிழ்க் கட்சிகள் மக்களை தேர்தல் காலத்தில் உசுப்பேத்தி விட்டு ஆபத்து வரும் வேளைகளில் கச்சிதமாக இருப்பதும் தமிழ் மக்கள் வாழ்வில் தொடர் கதையாக உள்ளது
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்காக உருப்படியாக எதனையும் சாதிக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐநாவில் அரசாங்கத்துக்கு கால அவகாசத்தையும் பெற்றுக் கொடுத்தது.
தற்போது பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் மீண்டும் மக்களை உசுப்பேத்தும் முகமாக ஜனாதிபதி கோட்டபாய அரசாங்கத்தினால் ஆபத்து வரப்போகிறது எனக் கூறி தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். தமிழ் மக்கள் 20 வருடங்களாக அனுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எதையும் சாதிக்க முடியாது திராணியற்றவர்களாக பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்தார்களே தவிர தமிழர்களுக்காக உருப்படியாக எதையும் சாதிக்கவில்லை.
வடக்கு கிழக்கில் சென்று அரசாங்கத்தை கவிழ்க்கப் போகிறோம் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த போகிறோம் என மக்கள் மத்தியில் கோஷங்களை எழுப்பிவிட்டு பாராளுமன்ற உணவகத்தில் ஒன்றாக விருந்து உண்பதும் தமது தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு உதவிகளை கோருவது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் செயற்பாடாக அமைந்து வருகிறது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பொதுவெளியில் விமர்சிப்பதும் பின்னர் அவர்களுடன் ஒன்று சேர்ந்து அமைச்சுப் பதவிகளை பெறப் போகின்றோம் எனக் கூறுவதும் தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு நாடகமாக உள்ளது.
ஆகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் முட்டாள்கள் என எண்ணிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொள்ளும் விசமப் பிரச்சாரங்களுக்கு இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.