கொரோணா காலப்பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் வடக்கு கடல் மார்க்கம் ஊடாக போதைப்பொருள் கடத்தல் மீண்டும் அதிகர...
கொரோணா காலப்பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் வடக்கு கடல் மார்க்கம் ஊடாக போதைப்பொருள் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது.
கடற்படையினர் தற்பொழுது உள்ள சூழ் நிலையில் வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும், கொரோனா தொற்றுக்கு எதிராகவும் போராடவேண்டிய நிலை உள்ளதென கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.
காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர் மற்றும் கடலோர காவற்படையினர் சிறந்த முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தற்போது இலங்கைக்குள் சட்டவிரோதமாகநுழைய முற்படும் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களினால் கொரோணா தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
இவற்றில் இருந்தும் போதைப்பொருள் கடத்தலில் இருந்தும் நாட்டினை பாதுகாக்கவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. கடற்படைத்தளபதி மற்றும் ஜனாதிபதி அவர்களின் உத்தரவுக்கு அமைய இலங்கை கடற்பரப்பில் தற்போது கடற்படையினரின் சுற்றுகாவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம் கஞ்சா, ஹெரோயின் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியும். அதே போல் புலனாய்வுதுறையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இவற்றை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அதே போல் நாட்டுக்குள் பிரவேசிக்கும் இலங்கை பிரஜைகள், மற்றும் வெளிநாட்டவர்கள் தொடர்பிலும் விமானப்படையினருடன் இணைந்து கடற்படையினர் கடமையாற்றி வருகின்றனர்.
வடக்கு மக்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன் உங்களுக்கும் சமூக பொறுப்பு அவசியமானது போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க கடமையாற்றும் கடற்படை மற்றும் முப்படையினருக்கும் உதவி புரிவதன் மூலமே குறித்த போதைப்பொருள் கடத்தலினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் இந்த போதைப்பொருள் கடத்தல்தொடர்ச்சியாக இடம்பெறுமாக இருந்தால் வடக்கில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது எனவே இந்த விடயத்தினை மக்களும் கருத்தில் எடுக்க வேண்டும் என்றார்.