தபால் வாக்குகளை அளிக்க முடியாதவர்களுக்கு மேலும் இரு விசேட தினங்களாக, ஜூலை 24ஆம், 25ஆம் திகதிகளில் வாக்களிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ...
தபால் வாக்குகளை அளிக்க முடியாதவர்களுக்கு மேலும் இரு விசேட தினங்களாக, ஜூலை 24ஆம், 25ஆம் திகதிகளில் வாக்களிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வாய்ப்பு வழங்கியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், மஹிந்த தேசப்பிரியவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கு ஜூலை 13 முதல் 17 வரையும் அதில் தவறியவர்களுக்கு ஜூலை 20, 21 ஆம் திகதிகளில், தபால் வாக்கு அத்தாட்சிப்படுத்தல் அலுவலகம் அல்லது அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தினங்களில் வாக்களிக்க தவறியவர்களுக்கு மேலும் இரு விசேட தினங்களில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூலை 24ஆம், 25ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 24: மு.ப. 8.30 - பி.ப. 4.00
ஜூலை 25: மு.ப. 8.30 - பி.ப. 2.00
தபால் வாக்குகளை அளிக்கத் தவறிய வாக்காளர்களுக்கு, தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் குறித்த வசதிகள் பெற முடியும் என, ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அளிக்கப்படாத வாக்குச் சீட்டு பைக்கற்றுகளை தற்போது வரை, தம் வசம் வைத்துள்ள, தபால் வாக்கு அத்தாட்சிப்படுத்தும் அதிகார்கள் இருப்பார்களாயின், குறித்த பைக்கற்றுகளை எடுத்துச் சென்று ஜூலை 23ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், அத்தாட்சிப்படுத்தல் அலுவலர் காரியாலயம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில், ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 24, 25ஆம் திகதிகளில், வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்குகளை அளிக்க முடியும் என, ஆணைக்குழு அறிவித்துள்ளது.