யாழ்.மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளைக் கோரியமையினாலேயே என் மீது சுமந்திரன் மாநகர சபை உறுப்புர...
யாழ்.மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளைக் கோரியமையினாலேயே என் மீது சுமந்திரன் மாநகர சபை உறுப்புரிமை தொடர்பில் வழக்காடி வருகின்றார் எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஈபிடிபியினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும் கடுமையாகச் சாடியுள்ளார்.
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்
அவர் அங்குமேலும் தெரிவிக்கையில்
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை கள்ளர்கள் கடத்தல் காரர்கள் என கடுமையாகச் சாடி பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.
பின்னர் தேர்தல் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்காக ஈழமக்கள் ஜனநாயக் கட்சியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சரணாகதி அடைந்தது மேஜர் பதவியை ஆனோல்ட்டுக்கு வழங்கி ஆட்சியை தக்க வைப்பதற்கு ஈ.பி.டி.பியுடன் கூட்டமைப்பினர் கூட்டுச்சேர்ந்தனர்.
இதற்கு பரிகாரமாக யாழ்ப்பாணம் மாநகர சபை ஈ.பி.டி.பியின் ஆட்சியில் இருந்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மூடி மறைப்பதும் அதில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பது என்றும் கூட்டமைப்பினர் இனங்கியுள்ளனர்.
நான் யாழ்.மாநகரசபையில் நான்கு மாதங்கள் உறுப்பினராக இருந்தேன் அப்போது மாநகரசபையின் கடந்த ஆட்சியில் இடம் பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.
அதிலும் குறிப்பாக புல்லுக்குள கட்டடம் கட்டப்பட்டதில் பாரிய முறைகேடுகள் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி சபையில் பேசியிருந்தேன். இவ்வாறான நிலையில் இவற்றைத் தடுத்து நிறுத்தி ஈ.பி.டி.பியினரை காப்பாற்றுவதற்காக என் மீது உறுப்பினர் உரிமை தொடர்பான வழக்குதொடரப்பட்டது.
ஈ.பி.டி.பியிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பெற்றுக்கொணட நன்றிக் கடனைச் செலுத்துவதற்காக சுமந்திரன் எனக்கு எதிரான வழக்கை இன்றுவரை நடத்தி வருகின்றார்.
இப்போது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் ஈ.பி.டி.பியினர் கூட்டமைப்பினையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஈ.பி.டிபியினரையும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஆனால் உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் இடையில் எவ்வித வித்தியாசங்களும் இல்லை இந்த இரு தரப்பும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே எனவே நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிந்தித்து சரியானவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றார்.