தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆயுத ரீதியில் தோற்கடிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆயுத ரீதியில் தோற்கடிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரான வரதராஜசிங்கம்(விண்ணன்) குற்றம்சாட்டினார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்து நிமிடத்தில் உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதி யுத்தத்தின்போது கொழும்பு களநிலவரங்களை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லாமல் விட்டதன் விளைவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் தோற்கடிப்பதற்கும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிவதற்கும் காரணமாக இருந்தது.
இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் எனது கப்பல் மூலம் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு தேவையான உணவுப்பொருட்களை விநியோகித்தவன் என்கிற ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அக்காலப்பகுதியில் தொடர்பில் இருந்தேன்.
இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் வன்னி மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்குவதற்காக அப்போது அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச என்னை தொடர்பு கொண்டு நீங்கள் கப்பலைத் தரும் பட்சத்தில் வன்னி மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்குவதற்கு தாம் தயாராக இருக்கிறோம் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரியிருந்தார்.
அவரது கோரிக்கைக்கு அமைய அரசாங்க அதிபரோடும் தமிழீழ விடுதலைப் புலிகளோடும் தொடர்பு ஏற்படுத்தி மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வந்தேன். தமிழீழத் தேசியத் தலைவரினால் ஆயுதப் போராட்டம் ஒரு முனையிலும் ஜனநாயக் போராட்டம் மறு முனையிலுமாக கொண்டு செல்வதற்கு முயற்சித்தார் .அந்த வகையில் ஜனநாயக ரீதியில் வெறும் பத்து நிமிடத்தில் கூட்டத்தைக் கூட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கி அதனுடைய செயற்பாடுகள் சம்பந்தமாக விளக்கிய தலைவராக பிரபாகரன் காணப்படுகிறார் .
அவர் வழங்கிய ஆணையினால் முதல் முதல் பாராளுமன்ற தேர்தலிலே வடக்கு-கிழக்கு சர்ந்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு ஜனநாயக நீதியில் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக பிரபாகரனால் அனுப்பப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னிப்பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாடல் தடைப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது மௌனமாக இருந்தனர் .
அக்காலப்பகுதியில் அரசாங்கத்துடன் அல்லது சர்வதேசத்துடன் பேசி இலங்கை அரசாங்கத்தின் மூலம் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் மௌனம் காத்ததன் விளைவே பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொள்வதற்கு காரணமாக இருந்தது.
தாம் செய்த துரோகங்களை மறந்து அரசியல் மேடைகளில் சர்வதேச விசாரணை அரசியல் தீர்வு என கோஷங்களை எழுப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது இனத்திற்கு செய்த துரோகத்திற்கு இம் முறையைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தை புகட்டுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.