முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனிதப் பேரவலத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே பொறுப்பேற்க வேண்டுமென ஸ்ரீலங்க...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனிதப் பேரவலத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே பொறுப்பேற்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் தொழிலதிபருமான பரநிருபசிங்கம் வரதராஜசிங்கம் (விண்னன்)குற்றஞ் சாட்டினார்.
யாழ் நகரப்பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்தினால் பல உயிர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது
அக்காலப் பகுதியில் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத் தருகிறோம் எனக் கூறிப் பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அக் காலப்பகுதியில் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் தலைமறைவாகினர் .
வாக்களித்த மக்கள் நடுத்தெருவில் யாருமற்ற அநாதைகளாக நின்ற போது இவர்கள் தமது குடும்பங்களுடன் உல்லாசமான வாழ்க்கை வாழ்ந்ததை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் தேசியத் தலைவராக விளங்கிய வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழர் தீர்வு விடயத்தில் உருப்படியாக எதனையும் சாதிக்க முடியவில்லை.
வடக்கு மாகாண சபையை ஏற்க மாட்டோம் என கூறிய கூட்டமைப்பு இறுதியில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு தமது கட்டுப்பாட்டில் மாகாண சபையை வைத்துக் கொண்டது.
மத்திய அரசாங்கத்தினால் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கூட மக்களின் அபிவிருத்திக்காக முழுமையாகப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய வரலாறுகளும் வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றது.
தமது தனிப்பட்ட குரோதங்களையும் உட்கட்சிப் பூசல்களையும் வெளிப்படுத்தும் இடமாக கூட்டமைப்பு உறுப்பினர்கள் வடக்கு மாகாணசபையை பயன்படுத்துகிறார்களே தவிர மக்களின் நலன்களைப் பற்றி சிந்திக்கவில்லை
வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரன் அணி சுமந்திரன் அணி என இரு அணிகளாக உறுப்பினர்கள் பிரிந்து செயற்பட்டதுடன் மாகாண சபையின் அதிகாரங்கள் போதாது எனவும் கோஷங்களை எழுப்பினர் . மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கூட பயன்படுத்த முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இனியும் மக்களை ஏமாற்ற இடமளிக்கக் கூடாது.
தமிழினத்தைக் காப்பாற்ற போகிறோம் தீர்வைப் பெற்றுத் தரப் போகிறோம் என பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கோஷமிடும் கூட்டமைப்பினர் இதுவரை எதையாவது ஒன்றை சாதிக்க முடிந்ததா?
தேர்தல் காலங்களில் ஆபத்து வரப்போகிறது என அபாய சங்கு ஊதும் கூட்டமைப்பினர் தேர்தல் முடிந்ததும் வாயடைத்துப் போய் மௌனிகளாக ஆகின்றனர்.
ஆகவே தமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்க்கையினை கருத்தில் கொண்டு கடந்த நல்லாட்சியில் கூட்டமைப்பினர் செய்த துரோகத்தனங்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கைச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் அபிவிருத்தியுடனான அரசியல் தீர்வினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்