தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் இம்முறை வாக்களித்தால் அது ராஜபக்சாக்களின் வெற்றியை வலுவூட்டி விடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியி...
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் இம்முறை வாக்களித்தால் அது ராஜபக்சாக்களின் வெற்றியை வலுவூட்டி விடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த கருத்தை வெளியிட்டார்
அவர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போகிறோம் எனக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ராஜபக்சாக்களுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள் என பலத்த சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ராஜபக்சாக்களும் இணைந்தால் தமிழர்களின் இருப்பே கேள்விக் குறியாகிவிடும்.
தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்காமல் ராஜபக்சாக்களுடன் இணைந்து இவ்வாறு தமது இருப்புக்களை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ரகசிய உடன்பாட்டை செய்துவிட்டு தமிழ் மக்களிடம் சந்தர்ப்பம் தாருங்கள் எனக் கையேந்துகிறார்கள்.
போராளிகள் கட்சியை இராணுவ புலனாய்வாளர்களின் அடிவருடிகள் எனக் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் போராளி கட்சியை தம்மோடு இணைத்துக் கொண்டு விடுதலைப் புலிகளுக்காக அனுதாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
தமிழ் தேசிய விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் என்ன நிலையில் இருந்தார்களோ என அறியாத சிலரை வைத்துக் கொண்டும் தமிழ் மக்களை உணர்வு ரீதியாக தூண்டும் செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்
இம்முறை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் சிறந்த பாடத்தினை புகட்டுவதற்கு தயாராக உள்ள நிலையில் தமிழ் மக்களின் மாற்று அணியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை தமிழ் மக்கள் அமோக வெற்றியடையச் செய்வார்கள்.
ஆகவே எமது அணியானது தமிழ் மக்களின் உரிமைஅரசியலுக்காக எவ்வித
சுகபோகங்களுக்கும் அடிமையாகாமல் மக்கள் ஆணையைப் பெற்று உறுதியுடன் பயணிப்போம் என மேலும் அவர் தெரிவித்தார்.