சஜித் பிரேமதாச நாட்டின் பழமையான ஐக்கிய தேசிய கட்சியையே பிளவுபடுத்தியவர். அவ்வாறான ஒருவர் நாட்டை பிளவுபடுத்த தயங்கமாட்டார் என பிரதமர் மஹிந...
சஜித் பிரேமதாச நாட்டின் பழமையான ஐக்கிய தேசிய கட்சியையே பிளவுபடுத்தியவர். அவ்வாறான ஒருவர் நாட்டை பிளவுபடுத்த தயங்கமாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி, தெல்தெனிய நகரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர், தந்தையின் வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிகாரம் கோரும் சஜித் பிரேமதாஸவின் தந்தையின் ஆட்சி யுகம் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்,
சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கை தொகுப்புகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை தொகுப்புகளுக்கும் இடையில் ஒற்றுமை ஒன்று உள்ளது. இலங்கை மிக பழைமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் தலைமைத்துவத்தை ஏற்று செயற்பட்ட சஜித் பிரேமதாஸ, நாட்டை பிளவுப்படுத்துவதற்கும் ஒரு போதும் தயங்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.
சஜித் பிரேமதாஸ அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது தந்தையின் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கே அதிகாரத்தை கேட்கின்றார். ஆர்.பிரேமதாஸ காலம் தொடர்பில் நினைவுப்படுத்தினால் 88, 89 காலப்பகுதியில் காணப்பட்ட கலவர யுகமே எந்த ஒரு நபருக்கும் நினைவுக்கு வரும். பிரேமதாஸ யுகத்தின் கலவரம் காரணமாக கண்டியின் சில கிராமங்கள் படுகொலைகளுக்குட்பட்டது. நாய் - பூனையேனும் மீதம் வைக்கவில்லை. அந்த கலவரங்கள் தொடர்பில் இந்த பிரதேச மக்கள் என்ற ரீதியில் உங்களுக்கு புதிதாக ஒன்றும் கூற தேவையில்லை. அந்த கலவரத்தினால் முழு நாட்டிலும் 60 ஆயிரத்திற்கும் அதிக இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டனர்.
1988ஆம் ஆண்டில் பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் மாத்திரம் 22 பேர் கொல்லப்பட்டனர். கண்டி மஹவத்தை படுகொலை சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 157 ஆகும். அதில் 129 கொலை பிரேமதாஸ அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டது. 28 பேரை மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறையாளர்கள் கொலை செய்தனர். 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரேமதாஸ அரசாங்கம், கண்டி டீ.எஸ்.சேனாநாயக்க மாவத்தையில் மேல் பகுதிக்கு செல்லும் பழைய மாத்தளை வீதியில் இளைஞர், யுவதிகள் பலர் எரித்து கொலை செய்யப்பட்டனர்.
பிரேமதாஸ யுகத்தில் கண்டி மாவட்டத்தின் கடுகன்னாவ, ரன்தெனிகல, கண்டி, சில்வெஸ்டர் வித்தியாலயம், அஸ்கிரி பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லங்கள், அங்கும்புர குண்டசாலை, கட்டுகஸ்தோட்டை தெல்வத்தை சித்திரவதை கூடங்கள் உட்பட பல பாரிய எண்ணிக்கையிலான சித்திரவதை கூடங்கள் இருந்தமை எங்களுகக்கு நினைவில் உள்ளது.
இடைக்கிடையே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பேராதனை பாளத்தில் இருந்து மகாவெலி கங்கைக்கு இழுத்து வீசப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகம். கடுகன்னாவ நகரத்தில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட 14 - 15 வயதுடைய சிறுமிகளின் சாம்பல்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று அது தொடர்பில் முழு உலகினதும் அவதானம் செலுத்தப்பட்டது. அன்று காணப்பட்ட அரசாங்கம் அந்த சாம்பல்கள் எவ்வாறு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதென தேடிய போதிலும் அந்த சிறுமிகளை யார் கொலை செய்தார்கள் என தேடவில்லை. இதனால் இன்று மீண்டும் பிரேமதாஸ யுகம் ஒன்று ஏற்படுத்த மக்கள் அச்சப்படுகின்றார்கள் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தை, ஆனந்த அழுத்கமகே உட்பட இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் இணைந்திருந்தனர்.