பெண்களே பெண்களைத் தெரிவு செய்வதில்லை மாற்றம் அவர்களிடமிருந்து தான் வரவேண்டும். ஆகவே நீங்கள் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் அதிலுள்ள ஒரு பெ...
பெண்களே பெண்களைத் தெரிவு செய்வதில்லை மாற்றம் அவர்களிடமிருந்து தான் வரவேண்டும். ஆகவே நீங்கள் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் அதிலுள்ள ஒரு பெண் வேட்பாளருக்கு நிச்சயம் வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் தெரிவித்தார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் யாழ் மாவட்ட பெண்கள் சமாசம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பெண் வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடல் நேற்று இடம்பெற்றது." உங்களுக்காய் எங்களது வாக்குறுதிகள்" எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ள பெண்வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பெண் வேட்பாளர்கள் மேடைக்கு பேச அழைக்கப்படும்போது அவர்களிடம் சில வினாக்களையும் சுட்டிக்காட்டி அதற்கான விளக்கம் கேட்கப்பட்டது. ஒவ்வொரு வேட்பாளர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இதன் போது பவதாரணி ராஜசிங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இங்கிருக்கின்ற பெண்கள் அனைவருமே நாடாளுமன்றம் செல்லத் தகுதியானவர்கள்.அவர்கள் அத்தனை பேரையும் நாடாளுமன்றம் அனுப்பிவையுங்கள் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இங்குள்ள பெண்களே பெண்களைத் தெரிவு செய்வதில்லை மாற்றம் அவர்களிடமிருந்து வரவேண்டும். ஆகவே நீங்கள் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் அதிலுள்ள ஒரு பெண்வேட்பாளருக்கு நிச்சயம் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். மேலும் அவர் பேசுகையில் இவ்வாறான ஒருங்கிணைப்பொன்றை ஆண்களிடம் ஏற்படுத்த முடியாது ஆனால் இன்று நாம் பெண்கள் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு அதற்காக இங்கே இணைந்திருக்கிறோம். இந்த மாற்றம் எங்களால் முடியும் என்றார். நாங்கள் கட்சியால் வேறுபட்டாலும் மக்கள் தேவைகள் தொடர்பில ஒன்றுபட்டு இருப்போம் என்றார்.
பெண்தலைமைத்துவம் என்பது கணவனை இழந்த குடும்பம் மட்டுமல்ல.பொருளாதார அடிப்படையில் பெண்களை முதன்மையாக கொண்டு இயங்கும் குடும்பங்களும் பெண் தலைமைத்துவக் குடும்பம் என்ற வரையறைக்கு உட்பட்டது ஆகவே அவர்கள் தொடர்பில் அவதானித்து அவர்களுக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.
இங்கிருக்கின்ற பெண்கள் அனைவருமே தாயாக மனைவியாக நிச்சயம் போதைவஸ்துக்களுக்கு எதிரானவர்களே. அதனை நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டும்.அதற்கான சட்டங்கள் இலங்கை முழுவதற்குமே பொதுவானதாய் உள்ளது. ஆனால் யாழில் இன்னும் அழுத்தம் காணாமல் உள்ளதா என ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சார்பில் ஞான குனேஸ்வரி ,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் மீரா அருள்நேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உமா சந்திரபிரகாஷ் ,இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சசிகலா ரவிராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.