கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும் என கிளிநொச்சி கல்வி வலய பணிமனையில் நடந்த கூட்டத்தில் தீ...
கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும் என கிளிநொச்சி கல்வி வலய பணிமனையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அண்மையில் கிளிநொச்சியை சேர்ந்த மாணவர்கள் நால்வர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டனரென சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
இந்நிலையில் இன்று அவசரமாக கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் கமல்ராஜன் அவர்களின் தலைமையில் கூடி நிலைமையை ஆராய்ந்து கீழ்வரும் முடிவுகளை எடுத்தனர்.
மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கல்வியலாளர்கள் பெற்றோர்கள் குறிப்பாக அதிபர் ஆசிரியர்கள் அனைவரும் குரலெழுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
போதைப்பொருள் விற்பனையாளர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது பொலிஸ் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுத்து மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
இன்றைய இளைஞர்கள் நாளைய எதிர்கால தலைவர்கள். ஆகவே அவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டும்.
பெரும்பாலான மாணவர்கள் போதை பொருள் பாவனையின் கொடூரம் பற்றி நன்கு அறிவார்கள். அவர்கள் அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவர்கள் .
இருப்பினும் ஒரு சில மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக இந்த பாவனைக்கு வலுக்கட்டாயமாக உந்தப்படுகிறார்கள்.
இவ்வாறான மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் விழிப்படையச் செய்து போதியளவு ஆலோசனைகளையும் சிகிச்சையையும் வழங்கி தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான உரிய ஆயத்தங்களை செய்வது பற்றி கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் போதைப்பொருள் பாவனையின் கொடூரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி எமது பகுதிகளில் முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மருத்துவர் ஜெயராஜா, மருத்துவர் சத்தியமூர்த்தி, கலாநிதி யோசுவா, வலயக்கல்வி பணிமனை உயர்நிலை உத்தியோகத்தர்கள் சில பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.