புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை சிங்கள மீனவர்கள் தொழில் செய்யும் இடமாக மாற்றியது மாவை சேனாதிராஜாவும் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் தான்...
புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை சிங்கள மீனவர்கள் தொழில் செய்யும் இடமாக மாற்றியது மாவை சேனாதிராஜாவும் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் தான் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளரான விண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறு யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மீனவ சமுதாயங்களின் சொர்க்கபுரியாக விளங்கிய மயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்து தருகிறோம் எனக் கூறிய அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நரித்தனங்களிற்கு அகப்பட்டு இன்று சிங்கள மீனவர்கள் எமது வளத்தை அபகரித்துச் செல்லும் நிலைக்கு வித்திட்டுவிட்டார்கள்.
ரணில் நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சராக இருந்த திருமதி விஜயகலா மகேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து யாழ் மக்களின் ஏற்றமிகு
வருமானத்துறையாக காணப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தையே கூறுபோட்டு விட்டார்கள்.
துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் போது அங்கு தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஏற்ற மீன்பிடி உபகரணங்களை வழங்காமலும் அப்பிரதேசத்தில் வசித்த மக்களை மீள்குடியேற்றம் செய்யாமலும் எவ்வாறு மயிலிட்டி துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்வார்கள்.
எமது அரிய கடல் வளத்தை தென்னிலங்கை மீனவ சமூகத்திற்கு விற்கும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் செயற்பட்டதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
நான் தொழிலதிபராக இருக்கும் நிலையில் தற்போது அரசியலில் ஈடுபடத் தீர்மானித்தேன். நான் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் என்னை வெற்றியடையச் செய்யும் சந்தர்ப்பத்தில் ஒரு மாதத்திற்குள் அப்பகுதி ஆக்கிரமித்துள்ள பெரும்பான்மையின மீனவ படகுகளை அப்புறப்படுத்துவேன் என உத்தரவாதம் அளிக்கிறேன்.
ஆகவே எமது இனத்தை அழித்தது மட்டுமல்லாமல் எமது அபிவிருத்தியையும் அழிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை மக்கள் நிராகரிப்பதோடு பழைய முகங்களை விடுத்து புதிய முகங்களை பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்