கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்க, ஐதேக, யாழ் எக்ஸ்பிரஸ்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஏற்கனவே இதனை தான் அறிவித்துள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. பரிதாபகரமான நிலைக்கு வந்துள்ளமை தொடர்பில் கட்சியின் விசுவாசிகள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆயினும், சரியான நேரத்தில் பொருத்தமான சீர்திருத்தங்களை செய்தால் கட்சியை மீளமைக்க முடியும் என தான் நம்புவதாக, அவர் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மிக உயரிய கௌரவத்துடன் சரியான பாதையில் இந்தக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்குமாறு, பொதுத் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து அழைப்புகள் வந்ததாக அவர் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐ.தே.க. செயற்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கட்சிக்கு ஒரு புதிய இளம் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.
இதில் முன்னாள் ஐ.தே.க. எம்.பி.க்களான, ரவி கருணாநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேகுணவர்தன, அர்ஜுன ரணதுங்கா, நவீன் திஸாநாயக, ருவன் விஜேவர்தன ஆகியோரின் பெயர்கள் தலைமைப் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
ஆயினும் அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 6 மாதங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவே ஐ.தே.க.வின் தலைவராக நீடிப்பார் என்றும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களுக்குப் பின்னரே அவர் பதவியிலிருந்து விலகுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.