நாளை மறுநாள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆண...
நாளை மறுநாள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்
இதற்கமைய, 12 ஆயிரத்து 774 தேர்தல் தொகுதிகள் காணப்படுவதாகவும், 12 ஆயிரத்து தொள்ளாயிரத்து 85 வாக்களிப்பு நிலையங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், குறித்த வாக்களிப்பு நிலையங்கள் 11 ஆயிரத்து 102 இடங்களில் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அவற்றில் சுமார் எண்ணாயிரம் வாக்களிப்பு நிலையங்கள் அரச பாடசாலைகளிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.
அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவோரின் கைகள் நன்கு சுத்தப்படுத்தப்படும் எனவும், பின்னர் வாக்குச் சாவடிக்கு வந்த பின்னரும் கைகள் சுத்தப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன் வாக்களிப்பு நிலையங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளி பின்பற்றப்படும் எனவும், இது குறித்து மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் போது, முடியுமெனில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாக்களை கொண்டு வருமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகின்றார்.
அத்துடன், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், செல்லுபடியான ஆள் அடையாள அட்டைகளை கொண்டு வருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கமைய, தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், அரச ஓய்வூதிய அட்டை, முதியோர்களுக்கான அடையாள அட்டை அல்லது மதத் தலைவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த அட்டைகள் இல்லாத நபர்கள், கிராம அலுவலர்கள் அல்லது தோட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.
இதேவேளை, வாக்களிப்பதற்காக வழங்கப்படும் வாக்குச்சீட்டின் மேல் புறத்தில், கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் அச்சிடப்பட்டுள்ள அதேவேளை, கீழ் புறத்தில் விருப்பு இலக்கங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முதலில் கட்சியின் சின்னத்திற்கு பக்கத்தில் புள்ளடியிட வேண்டும் எனவும், அதன் பின்னர் கீழ் உள்ள இலக்கங்களை தெரிவு செய்து தமது விருப்பு வாக்குகளை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விருப்பு வாக்குகளை வழங்கும் போது, ஒருவர் அல்லது இருவர் அல்லது மூன்று வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை வழங்க முடியும் எனவும், வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவதற்கு முன்னர் வேட்பாளர்களின் இலக்கங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை வழங்க முடியும் என்ற போதிலும், ஒரு கட்சியை மாத்திரமே தெரிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரே கட்சியைச் சேர்ந்த ஒருவர், அல்லது இருவர் அல்லது மூவருக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் வாக்களிக்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் 12 லட்சத்து 19 ஆயிரத்து 395 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 38 ஆயிரத்து 806 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
அத்துடன், குறைந்த அளவிலான புதிய வாக்காளர்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு நான்காயிரத்து 666 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, வாக்களிப்பதற்காக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் 17 லட்சத்து 85 ஆயிரத்து தொள்ளாயிரத்து 64 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.