அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 20 ஆவது திருத்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத...
20 ஆவது திருத்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திக கால்லகே எனும் வழக்கறிஞர் ஒருவரினால் குறித்த மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக, குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் பல்வேறு ஏற்பாடுகள், 20 ஆவது திருத்தத்தின் மூலம் இல்லாது செய்யப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்களான, ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மீறப்படும்போது அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் உரிமை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை கணக்காய்வு செய்தல் மற்றும் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் போட்டியிடுவதற்கான தடை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள், 20 ஆவது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த 20 ஆவது திருத்த சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்புக்காக விடப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு, மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
இதேவேளை, முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காக 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலம் வழங்கப்பட்டு அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நீதிமன்ற தீர்ப்பினை அடுத்தே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல மேலும் கூறியுள்ளார்.