20 ஆம் திருத்தம் சர்வாதிகார நிலைமைக்கு இட்டுச் செல்லும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட...
20 ஆம் திருத்தம் சர்வாதிகார நிலைமைக்கு இட்டுச் செல்லும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்த திருத்தத்தை கூட்டமைப்பு எதிர்ப்பதுடன் அதனைத் தோற்கடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்குமென்றும் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதனூடாகவே கூட்டமைப்பிற்குள் ஏற்படும் முரண்பாடுகள் குழறுபடிகளை தீர்த்க்க முடியுமென்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுதுமலை சாவல்காட்டு வேம்படி வைரவர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆலயத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினராக கலந்த கொண்டு அடிக்கல்லை சித்தார்த்தன் நாட்டி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதாவது 20 ஆவது திருத்தம் மிகவும் ஒரு சர்வாதிகார ரீதியில் ஐனாதிபதியைக் கொண்டு போகக் கூடிய நிலைமையை உருவாக்க இருக்கின்றது. 19 ஆவது திருத்தத்தில் உள்ள நல்ல அம்சங்கள் அதாவது ஐனநாயக அம்சங்கள் எல்லாம் மறுதலிக்கப்பட்டு 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட இருக்கின்றது.
முக்கியமாக 19 ஆவதிலே இருந்த ஆணைக்குழுக்கள் எல்லாம் இல்லாமல் செய்யப்பட்டு குறிப்பாக பொலிஸ் ஆணையகம் தேர்தல் ஆணையகம் என இவைகள் எல்லாம் இல்லாமல் செய்யப்பட்டு ஐனாதிபதியின் கீழ் அதிகாரங்கள் கொண்டு வரப்படுகின்றது. இது ஒரு தனிமனிதரை மீண்டும் சர்வாதிகார நிலைமைக்கு கொண்டு செல்லும்.
ஆகவே நாங்கள் அதனை நாங்கள் முற்று முழுதாக எதிர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் நாங்கள் அதனை முற்று முழுதாக எதிர்ப்போம். அதற்கு எதிராகவே கூட்டமைப்பினது செயற்பாடுகள் அமையும். ஆகையினால் இந்த 20 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கான முழுமையான முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம்.
இதேவேளை கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென கூட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றான ரெலோ அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்ற நிலைமையில் பங்காளிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதாவது கூட்டமைபபை பதிய வேண்டும் என்பது இன்று நேற்று வந்த கோரிக்கை அல்ல. அது கூட்டமைப்பில் பங்காளிகளாக இருக்கின்ற கட்சிகள் அனைத்துமே மிக நீண்ட காலமாகவே தொடர்ந்து அந்தக் கோரிக்கைகைய முன்வைத்து வந்திருக்கிறார்கள்.
ஆயினும் யுத்தத்திற்குப் பின்னரான கூட்டமைப்பு காலத்தில் மிகத் தீவிரமாக அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்திருந்தது. அதனைச் செய்யப்படாமல் இருப்பதற்கும் அதனைச் செய்வதற்கும் தமிழரசுக் கட்சி பல காரணங்களைக் கூறி அதற்கு ஒரு தடையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது கூட்டமைப்பு ஒரே அமைப்பாக இருந்திருக்குமானால் நான் நினைக்கிறேன் இப்போது இருக்கின்ற குழப்பங்கள் குறறுபடிகள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கும். ஆகவே கூட்டமைப்பு ஒரே அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படுவதன் மூலம் தான் பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்றும் நான் கருதுகிறேன் என்றார்.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஐதீபனும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார். நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.