யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என யாழ். மாவட...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே என்.சூரியராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
தற்போது வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் கணிசமான அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை எந்தவித அனர்த்தங்களோ, சேதங்களோ இடம்பெற்றதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு அறிக்கை கிடைக்கவில்லை.
அடுத்து வரும் 18 மணித்தியாலங்களுக்கு இந்த நிலைமை தொடர்ச்சியாக நீடிக்கும் என வளிமண்டல திணைக்களத்தினரால் எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கோரப்படுகிறார்கள் .
அதிலும் கடல் பகுதிகளில் 70 -80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடிய நிலை காணப்படுவதால் மீனவர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.