இலங்கை அதிபர் சேவை- III இற்கு தகைமை பெற்ற ஆசிரியர்கள் சங்க பிரதிதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப...
இலங்கை அதிபர் சேவை- III இற்கு தகைமை பெற்ற ஆசிரியர்கள் சங்க பிரதிதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக 2018ம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை தரம்-III மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2018-10-19ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 2019.02.10ம் திகதி நடாத்தப்பட்டு அரசியலின் அடிப்டையில் நியமனம் வழங்கப்பட்டதாகவும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக இந்நியமனங்கள் வழங்கப்படவில்லை எனவும் சங்க உறுப்பினர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
தாங்கள் இப்பரீட்சையில் 03 பாடங்களுக்கும் சேர்த்து ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 40 புள்ளிகள் எனும் அடிப்படையில் மொத்தம் 120 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த போதும் தமக்கு நியமனம் வழங்கப்படவிலை எனவும் ஆனால் 2008-2015 ஆண்டுகளில் நடைபெற்ற பரீட்சைகளில் 120 புள்ளிகளைப் பெற்ற அனைவருக்கும் அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த இவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரி கடந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் முறையிட்ட போதும் தமக்கு நியாயம் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்தனர்.
அதிபர் பிரமாணக்குறிப்பு 6.2-11இன்படி சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளுக்கு தனித்தனியாக ஆட்சேர்ப்பு இடம் பெற வேண்டுனெ குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தங்களது விடயத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை எனவும் இவர்கள் அமைச்சரிடம் சுட்டிக் காட்டியதுடன் பாதிக்கப்ட்ட தமக்கு இந்நியமனங்களை மீண்டும் போட்டிப் பரீட்சைகளுக்கு உட்படுத்தாமல் பெற்றுத் தருவதற்கு உரிய நமவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரிடம் வேண்டுகோளை முன்வைத்தனர்.
இவர்களது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இச்சந்திப்பில் சங்கத்தின் தலைவர் எஸ் முரளீதரன், செயலாளர் கே. ஜனார்த்தன் உள்ளிட்ட நாடடின் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆசிரிய அங்த்தவர்கள் கலந்து கொண்டனர்.