கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையா...
கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியபோதே குறித்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட ஏற்றுமதியாளர்கள் கடற்றொழில் சார் உற்பத்திகள் தொடர்பான ஏற்றுமதி நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் சில முறைகேடுகளை களைவதற்கு தீர்க்கமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் கடலுணவு ஏற்றுமதியில் 80 வீதமான வருமானத்தை நாட்டிற்கு ஈட்டித் தருகின்ற ரூனா வகை மீன்கள் உலக வெப்ப மயமாதல் காரணமாக அருகி வருகின்ற நிலையில் தொடர்ந்தும் மீன்பிடி படகுகளுக்கான முதலீடுகளை மேற்கொள்ளவதைவிட கடலில் பிடிக்கப்படுகின்ற மீன்களை பாதுகாப்பாக கரைக்கு எடுத்து வருதல் மற்றும் பதனிடுதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினர்.
கடல்சார் பொருட்கள் சிலவற்றின் ஏற்றுமதி செலவு அதிகரித்துள்ளமையால் சர்வதேச சந்தையில் இலங்கை மீன்களுக்கான கேள்வியை தக்க வைக்க ஏதுவாக அவற்றுக்கான வற் வரிகள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் முழுமையான கவனத்தை செலுத்தி குறித்த துறைகளில் தன்னிறைவு அடைவதுடன் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கம் தீர்க்கமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தீர்த்து வைக்கப்படும் எனத் தெரிவித்ததுடன் ஜனாதிபதி மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடி அவை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.