தன்னை ஒருவர் கடத்தியதாக தனது தாயுடன் பொலிஸில் முறையிடச் சென்ற மாணவியின்(வயது 15) முறைப்பாட்டை, கோப்பாய் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பொலிஸ...
தன்னை ஒருவர் கடத்தியதாக தனது தாயுடன் பொலிஸில் முறையிடச் சென்ற மாணவியின்(வயது 15) முறைப்பாட்டை, கோப்பாய் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பொலிஸதிகாரி வாங்க மறுத்து அலட்சியம் செய்ததோடு, குறித்த மாணவியையும் தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
நேற்று காலை 7.30 மணியளவில் குறித்த மாணவி பாடசாலைக்குச் சென்ற போது, கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபையின் சாலைக்கு முன்பாக ஒருவரால் மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் மாலை 3.30 மணியளவில் மாணவி மீளவும் அதே இடத்தில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.
மாணவியால் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடத்திச் சென்றவர் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் என்று அறிய முடிகின்றது.
சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை வழங்க மாணவியின் தாயார், மாணவியுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்த குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, மாணவியைத் தாக்கியுள்ளார். அத்தோடு முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ் அதிகாரி மாணவியையும் அவரது தாயாரையும் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மாணவியின் வீட்டுக்கு நேற்று இரவு சென்று முறைப்பாட்டை வழங்க வருமாறு கேட்டுள்ளார். எனினும் மாணவியின் தாயார் மற்றும் கிராம மக்கள் பொலிஸாரின் செயலைக் கண்டித்ததுடன் முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம் செல்ல மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.