முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும்அவர் சார்ந்த குழுவினர் 18 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரையான காலப்பகுதியில், தியாக...
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும்அவர் சார்ந்த குழுவினர் 18 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரையான காலப்பகுதியில், தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ முன்னெடுக்கமுடியாது என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
முல்லைத்தீவு தலைமை போலீஸ் பரிசோதகர் இது விடயம் தொடர்பில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ததற்கமைய, நீதிமன்றம் குறித்த தடைக்கட்டளையை பிறப்பித்துள்ளது.
இந் நிலையில் முல்லைத்தீவு தலைமைப் போலீஸ் பரிசோதகர் இன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்குச் சென்று நீதிமன்றத்தின் குறித்த தடைக்கட்டளை உத்தரவினை அவரிடம் கையளித்துள்ளார்.
மேலும் குறித்த தடைக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு தலைமைப் போலீஸ் பரிசோதகரினால், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்த திலீபன் எனப்படும் இராசையா பார்த்தீபன் என்பவரை நினைவுகூரும் முகமாக துரைராசா ரவிகரன் ஆகிய உங்களால் உண்ணாவிரத நினைவு வைபவத்தினையும், ஒன்றுகூடல்களையோ இன்று தொடக்கம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு போலீஸ் பிரிவுக்குட்பட்டு நடாத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.