20 வது அரசியலமைப்பு தொடர்பில் முற்றுமுழுதான இனக்கப்பாடு இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தங்களுக்கு கூறி...
20 வது அரசியலமைப்பு தொடர்பில் முற்றுமுழுதான இனக்கப்பாடு இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தங்களுக்கு கூறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த அரசியலைமைப்பை பாராளுமன்றத்தில் தடுப்பதற்கான நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
ஏற்கனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரிடம் பேசி இருக்கின்றோம். அவர்களும் தமக்கு முற்றுமுழுதான இணக்கப்பாடு இல்லை என்று கூறியுள்ளனர்.
தாங்கள் அரசாங்கத்துக்கு உள்ளேயே அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் அவர்களிடம், இது பாராளுமன்றத்துக்கு வருகின்றபோது எதிராக வாக்களிக்கவேண்டும் என்று கேட்டிருக்கின்றோம்.
ஆனால் அதுக்கு சாதகமான பதில் இதுவரை சொல்லவில்லை, ஆனால் அரசாங்கத்துக்குள்ளே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மட்டும் அல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வியத்மக என்ற அமைப்பில் இருந்து பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தவர்கள் பலர் கூட இதற்கு எதிராக கதைக்கின்றார்கள்.
அதனால் முதலாவது படி நீதிமன்றம் என்ன சொல்லப்போகின்றது என்பதை நாங்கள் பார்க்கவேண்டும் அதற்கு அடுத்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் நாங்கள் பார்க்கவேண்டும்.
அரசாங்கத்திற்கு 149 ஆசனங்கள்தான் இப்போது இருக்கின்றது. 150 கிடைக்கலாம் ஆனபடியால் பாராளுமன்றத்தில் இதனை தடுப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மற்றைய கட்சிகளுடனும் இதற்கு எதிராக இருப்பவர்களுடனும் சேர்ந்து பேசி நடவடிக்கையினை நிச்சயம் எடுப்போம் என தெரிவித்துள்ளார்.