வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளின், சிகிச்சை நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் விநியோகம்...
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளின், சிகிச்சை நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் விநியோகம் செய்தல் தொடர்பான அறிவித்தல் ஒன்றினை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று நோயின் பரவல் காரணமாக தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துகளை கிரமமாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதனைத் தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சு, அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து காவல்துறையின் உதவியுடன் அரச வைத்தியசாலைகளில் பதிவுசெய்துள்ள தொற்றா நோயாளர்களுக்கான மருந்துவகைகளை தபால் திணைக்களத்தின் உதவியுடன் அவர்களது வீட்டிற்கு கொண்டு சென்று வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே வடமாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளின் சிகிச்சை நிலையங்களில் தொற்றா நோய்களுக்காக சிகிச்சைபெறுகின்ற நோயாளர்கள் தங்களுக்குரிய வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அவர்களுடைய சரியான பெயர்,முகவரி,தொலைபேசி இலக்கம்,பதிவு செய்யப்பட்ட சிகிச்சைநிலைய இலக்கம் (கிளினிக் இலக்கம்) என்பவற்றை அறிவித்து தமக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆ.கேதீஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கம் 021 222 6666, வடக்கு மாகாண சபையின் இணையத்தளம் மற்றும் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் முகநூல் மூலமாகவும் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளுக்குமுரிய தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஆ.கேதீஸ்வரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மேற்குறிப்பிட்ட வழிமுறைகளினுடாக தங்களுடைய மருந்துளை பெற்றுக்கொள்வதில் ஏதாவது சிரமங்கள் ஏற்படின் 021 222 6666 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என ஆ.கேதீஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.