பனை அபிவிருத்திச் சபையினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்ட...
பனை அபிவிருத்திச் சபையினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம் இன்றுஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜ் தெரிவித்தார் .
யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபையின் தலைமை காரியாலயத்தில் வீடுகளில் இருந்தவாறு பனை உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்யும் புதிய வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இன்று பனை அபிவிருத்தி சபை ஒரு புதிய யுகத்தில் காலடி வைக்கின்றது. பனை அபிவிருத்தி சபையினால் சாதாரண விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முகமாக பனை அபிவிருத்தி சபையினால் வடபகுதி உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று பனை அபிவிருத்தி சபையினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களினை தற்போது உள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் எமது விற்பனை நிலையங்களில் வந்து தமது பொருட்களை கொள்வனவு செய்யாது தமது வீடுகளில் இருந்தவாறு இணையவழி மூலம் தமது பொருட்களை ஓடர் செய்து வீட்டில் இருந்தவாறே பெற்றுக் கொள்ளும் புதிய திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளோம் இன்றிலிருந்து இந்த திட்டம் செயற்படுத்தப்படும்.
குறிப்பாக பனை அபிவிருத்தி சபையின் பனை சார்உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளில் உள்ளவர்களும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் எமது அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது.
அதன் முதற் கட்டமாக இலங்கையில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்தவாறு பனை உற்பத்திப் பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான திட்டமே இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
எதிர்காலத்தில் இந்த திட்டமானது மேலும் விரிவாக்கப்பட்டு யாழ்ப்பாணம் மட்டுமல்லாது இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களும் பனை உற்பத்திப் பொருட்களை வீடுகளிலிருந்து மிகவும் மலிவான முறையில் பெற்றுக் கொள்ளும் திட்டமாக இது அமையும்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் பனை மரத்தினை அனுமதியின்றி வெட்டுதல் தொடர்பான ஒரு பிரச்சினை காணப்படுகின்றது அந்த பிரச்சினைக்கு ஏற்கனவே சட்டம் உள்ளது. எனினும் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை காணப்படுகின்றது. எனினும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத் திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
எந்த பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலாவது பனை மரம் வெட்டப்படுகின்றது என்ற முறைப்பாடு தெரிவிக்கப்படும் இடத்தில் உடனடியாக அந்த இடத்திற்கு பனை அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் அந்த பிரிவு பொலிசார் மற்றும் அந்த பிரதேச செயலர் பிரிவினுடைய உத்தியோகத்தர்கள் சென்று உடனடியாக அதை தடுத்து நிறுத்தி சட்ட நடவடிக்கை உட்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தோடு எம்மைப் பொறுத்த வரைக்கும் வட பகுதியில் பனை வளம் நிறைந்து காணப்படுகின்றது.அந்த பனை வளத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது அந்த பனை வளத்தினை பாவித்து நமது சாதாரண விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக எமது சிறு கைத் தொழில்கள் அபிவிருத்தி அமைச்சு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .
எனவே அந்த வேலைத் திட்டங்கள் இந்த வருட பாதீட்டிற்குபின்னர் அமுலுக்கு வர உள்ளது. மேலும் பனை அபிவிருத்தி சபையின் ஆளுகைக்குட்பட்ட திக்கம் வடிசாலையினை மீள திறப்பதற்குரிய நடவடிக்கை எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அந்த தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றுள்ளார்
திக்கம் வடிசாலை இணைந்த ஆரம்பிப்பதன் மூலம் வடபகுதியில் பல இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினையும் பெற்றுக் கொடுக்க முடியும். எனவே எமது அமைச்சு இந்த விடயத்தில் கூடிய கரிசனை செலுத்தி இந்த வருட பாதீட்டில் அதற்குரிய முன்மொழிவு செய்யப்படவுள்ளதாகவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்தார்.