இலங்கை அரச படையினர் போர்க்குற்றம் செய்திருப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடா...
இலங்கை அரச படையினர் போர்க்குற்றம் செய்திருப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்ததை அடுத்து பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இந்த கூற்றை வன்மையாகக் கண்டித்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா எழுந்து தனது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், போர்க் குற்றக் குரல்கள் சபையில் எழுவதாக பொன்னம்பலம் எம்.பி தெரிவித்ததைத் தொடர்ந்து மேலும் சர்ச்சை வெடிக்கத் தொடங்கியது.
குறுக்கீடு செய்து கருத்து வெளியிட்ட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதியாகிய தாம் போர்க் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக எம்.பி சபையில் கூறுகின்றதை அரச தரப்பு தட்டிக்கேட்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து சபையில் உள்ள அத்தனை ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எழுந்து பொன்னம்பலம் எம்.பியின் கருத்தை ஹான்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தொடர் உரைக்கு இடையூறும் விளைவித்துவந்தனர்.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எம்.பி பிரதியமைச்சர் நிமல் லன்ஸா, அரச படைகள் போர்க் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகக் கூறிய வசனங்களை ஹான்சாட்டிலிருந்து நீக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.
இந்த சந்தர்ப்பத்தில் சபையில் பெரும் கூச்சல் ஏற்பட்டதால் சபைக்குத் தலைமைதாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, கூச்சலில் ஈடுபடும் எம்.பிக்கள் வெளியேற்றப்படுவார்கள், அதனை தவிர்க்க வேண்டுமானால் ஆசனத்தில் அமரவும், அதுவரை சட்டப்பிரச்சினையை எழுப்ப இடமளிக்கமாட்டேன் என்று எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல்வேறு கூச்சலுக்கு மத்தியில் உரையை முடித்தார்.
இந்த உரையின்பின் சபையில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவதாரமாகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதாகவே பார்த்தேன் என்று குறிப்பிட்டார்.