ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளத...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
பிற்பகல் 1.40 மணியளவில் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் பட்ஜட் சமர்ப்பிக்கப்படும். அன்றைய தினம் நிதி அமைச்சரின் உரை மாத்திரமே இடம்பெறும். மறுநாள் முதலே பட்ஜட்மீதான விவாதம் ஆரம்பமாகும். டிசம்பர் 10 ஆம் திகதி மாலை பட்ஜட்மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.
மொட்டு ஆட்சியின்கீழ் இதுவரை 2 இடைக்கால கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், முழுமையான பட்ஜட்டொன்று முன்வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அதேவேளை, இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறைகளுக்கு நிறைய சலுகைகளை வழங்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகள்மூலம் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்ககூடியதாக இருந்துள்ளது என நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்அடிப்படையிலேயே கட்டுப்பாடுகளை தொடர்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுற்றுலாத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மீளக்கட்யெழுப்பும் நோக்கிலேயே அத்துறைக்கு கூடுதல் சலுகைகள் மானியங்கள் வழங்கப்படவுள்ளன.