கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிர...
கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இன்று முற்பகல் கடுகண்ணாவ பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடுகண்ணாவ ஹேனவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவேற்றும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு துறையின் கணிணி தொழிநுட்ப பிரிவினரால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா மரணங்கள் குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தினை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைத்தளங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.