நிவார் புயலினால் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழில் செய்பவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடமாகாண ...
செய்பவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே என்.சுப்பிரமணியம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண மீனவர்கள் நீண்டகாலமாக பலதரப்பட்ட வகையில்
பொருளாதார பின்னடைவை சந்தித்து கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையிலே இந்திய இழுவை படகுகளின் அத்துமீறிய வருகை உள்ளூர் சட்டவிரோத மீன்பிடி மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் வருகையினாலும் சட்டவிரோத தொழில் முறை நடைமுறையினாலும் எமது கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்ற வேளையில் போரின் வடுக்களில் இருந்து விடுபடாத மக்களை அனர்த்தங்களும் விடுவதில்லை. நிஷா புயல் பேரழிவு, சுனாமி பேரழிவு
அதனோடு பல ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட நிலை அதன் பின்னர் வந்த சூறாவளிகளினால் பாதிக்கப்பட்டு இப்பொழுது புயல் அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த அழிவுகளை சந்தித்த மக்கள் தமது அன்றாட வருமானத்திற்கு அவர்களுடைய பசியை போக்குவதிற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
எனவே இந்த நிலையில் நிவார் புயல் வந்து பெரிதும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள காரணத்தினால் மீனவ மக்கள் கடலுக்கு செல்லாது தங்கள் தொழில்களை விட்டு வீடுகளில் முடங்கியுள்ளார்கள்
பட்டினியை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையிலே இவர்களுடைய பசியினை நாங்கள் உடனடியாக போக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம் இதற்கு உரிய தரப்பினர் குறிப்பாக மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் முக்கியமாக கடற்றொழில் அமைச்சு இந்த விடயத்தை கருத்தில் எடுத்து இதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.