புரவி புயலின் காரணமாக வடக்கு மாகாணத்தில் மட்டும் 15 ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 885 பேர் பாதிப்படைந்துள்ளதோடு 2 ஆயிரத்து...
புரவி புயலின் காரணமாக வடக்கு மாகாணத்தில் மட்டும் 15 ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 885 பேர் பாதிப்படைந்துள்ளதோடு 2 ஆயிரத்து 370 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
வடக்கு மாகாணத்தில் வீசிய புரவி புயலின் காரணமாக இதுவரை யாழ்ப்பாணக் குடாநாட்டிலே 10 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரத்து 87 பேர் பாதிப்படைந்துள்ளதோடு 2 ஆயிரத்து 142 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் அணர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதேநேரம் இவ்வாறு பாதித்த 37 ஆயிரத்து 87 பேரில் 1,072 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 687 பேர் 33 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் சேதமடைந்த 2 ஆயிரத்து 142 வீடுகளில் 40 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மயிலிட்டி பகுதியில் நிறுத்தி வைத்திருந்த நீண்ட நாள் படகுகளில் 12 படகுகள் உட்பட மாவட்டத்தில் பல படகுகள் சேதமடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 536 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 581 பேர் பாதிப்படைந்துள்ளதோடு
35 வீடுகள் சேதமடைந்துள்ளது. அதேநேரம் சேதமடைந்த 35 வீடுகளில் ஒரு வீடு முழுமையாகவே அழிவடைந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 4 பேர் பாதிப்படைந்துள்ளதோடு 300 கடற்கல்களும் சேதமடைந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 8 நலன்புரி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கே 217 குடும்பங்களைச் சேர்ந்த 827 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று உறவுகளின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பேசாலையில் 200 வாடிகள் முழுமையாக அழிவடைந்துள்ளது.
இதேபோன்று 07 றோளர்களும் 03 பிளாஸ்ரிக் படகுகளும் முற்றாக அழிவடைந்துள்ளது. பகுதியளவில் 23 படகுகளும், 10 றோளர்களும் சேதமடைந்துள்ளதோடு 418 மீனவர்களின் வலைகள் முற்றாக நாசமாகியதன் வகையில் இதுவரையான சேதமாக 31 மில்லியன் கணக்கிடப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கிளிநொச்சியிலே 928 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 789 பேர் பாதிப்படைந்துள்ளதோடு 136 வீடுகள் பகுதியளவிலும் ஓர் வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரும் குளமான இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 25 அடியை தொட்டது. இதேபோன்று வவுனியா மாவட்டத்திலே 137 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் பாதிப்படைந்துள்ளதோடு 57 வீடுகளும் பகுதிச் சேதமடைந்துள்ளது.