யாழ்.மாவட்டத்தில் புரேவிப் புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு வருகின்றார்கள். இன்றைய தி...
யாழ்.மாவட்டத்தில் புரேவிப் புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு வருகின்றார்கள்.
இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிற்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் களவிஜயம் செய்து புரேவிப் புயலால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக நெடுந்தீவு பிரதேச மக்கள் மற்றும் நெடுந்தீவு பிரதேச பொது அமைப்புகளுடன் கலந்துரையாடினார்கள்.
இக் களவிஜயத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களது பிரச்சனைகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு பிரதேச பொதுமக்களின் பிரச்சனைகள், நெடுந்தீவு பிரதேச உத்தியோகத்தர்கள் மற்றும் மக்களது போக்குவரத்து பிரச்சனைகள், துறைமுகத்தை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் கடலரிப்பு தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்து நெடுந்தீவு பிரதேசத்தில் மின்பிறப்பாக்கி வைத்துள்ள நிலையத்தில் அதிகளவான மழை நீர் உட்புகுந்துள்ளமையால் நெடுந்தீவு பிரதேசத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பட்டுள்ளது. இதனை சீர் செய்வதற்காக இலங்கை மின்சார சபையுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.