எம்மோடு சிறையிலிருந்த உதய கம்மன்பில சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என அமைச்சராகிய பின் கூறுவது வேதனைக்குரிய விடயம் என முன்னாள...
எம்மோடு சிறையிலிருந்த உதய கம்மன்பில சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என அமைச்சராகிய பின் கூறுவது வேதனைக்குரிய விடயம் என முன்னாள் போராளிகள் ஒருங்கிணைந்த அமைப்பு தெரிவித்தது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அமைச்சராக இருக்கும் உதய கம்மன்பில கடந்த ஆட்சிக்காலத்தில் சிறிது காலம் மகசின் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சிறையில் இருக்கும்போது உங்கள் விடுதலைக்காக வெளியில் சென்று கதைப்பேன் எனக்கூறிய
உதய கம்மன்பில தற்போதய ஆட்சியில் அமைச்சராக உள்ள நிலையில் சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை எனக் கூறுவது எமக்கு மன வேதனையைத் தருகிறது.
அரசியல் கைதியாக சிறையில் உள்ளவர்கள் விரும்பி சிறைவாசம் சென்றதில்லை. தமிழ் மக்களுக்காக போராடி தமது சொந்த சுய விருப்பு வெறுப்புகளை துறந்து பல காலமாக சிறை வசம் அனுபவித்து வருகின்றனர்.
தமிழ் மக்கள் ஆயுதமேந்திப் போராடுவதற்கு சிங்கள அரசியல்வாதிகளே பிரதான காரண கர்த்தாக்களாக இருந்தமையை யாரும் மறுக்க முடியாது.
தந்தை செல்வா அகிம்சை வழியில் தமிழ் மக்களுக்காகப் போராடிய நிலையில் அதனைக் கண்டு கொள்ளாத சிங்களத் தலைமைகளின்அடக்குமுறையை ஆன செயற்பாடுகள் காரணமாக தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
ஆகவே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் தொடர்ந்தும் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசாங்கம் விடுதலை செய்வதற்கு முயற்சிகளை தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுசர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டுமென அவ் அமைப்பு மேலும் தெரிவித்தது.