ஆபிரிக்க நாடுகளில் 1988 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட இலம்பி என்ற வைரஸ் நோய் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாடுகளுக்கு வேகமாக பரவி வருகின்றது. 2019...
ஆபிரிக்க நாடுகளில் 1988 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட இலம்பி என்ற வைரஸ் நோய் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாடுகளுக்கு வேகமாக பரவி வருகின்றது.
2019ஆம் ஆண்டு எமது அயல் நாடான இந்தியாவிலும் இந்நோய் அடையாளம் காணப்பட்டது.. தற்போது எமது வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இந்நோய் காணப்படுகின்றது.
இவ் நோய் தாக்கம் உள்ளூர் இன மாடுகளை விட கலப்பின மாடுகளில் அதிகமாகக் காணப்படுவதுடன் எல்லா வயது மட்டங்களையும் தாக்குகின்ற போதும் கன்றுகளில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.
இதன் நோய் அரும்புகாலம் 04 -14 நாட்கள் ஆகும். நோய்த்தாக்கம் 40மூ ஆகவும் இறப்பு வீதம் 2மூ ஆகவும் உள்ளமை ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள்
இந் நோயின் பிரதான அறிகுறிகளாக காய்ச்சல், பசியின்மை, அதிக உமிழ்நீர் வெளியேறல், சளிவடிதல், கண்கள் சிவத்தல், கண்ணீர் வடிதல், உடல் தளர்ச்சி அடைதல், எடைகுறைதல், பால் உற்பத்தி குறைதல் ஆகிய ஆரம்ப அறிகுறிகளுடன் உடலின் பெரும்பாலான பகுதிகளின் தோலில் 2-5உஅ அளவுடைய கட்டிகள் உருவாகும். அத்துடன் அக அங்கங்களான வாய், மூச்சுக்குழல், குடல், சுவாசப்பை ஆகியவற்றிலும் கட்டிகள் உருவாகலாம்.
கட்டிகள் உடைந்து புண்ணாகுவதுடன் தோலில் உள்ள கட்டிகள் வெடித்து புண்ணாகி புளுக்கொண்ட புண்களாக மாற்றமடையும். அது மட்டுமன்றி கழுத்துப் பகுதியிலும், கால்களிலும் வீக்கம் ஏற்படும். இதனால் மாடுகள் நடக்க கஸ்டப்படும். அத்துடன் நிணநீர் கணுக்கள் வீங்கி காணப்படும்.
இந் நோயின் நீண்டகால தாக்கமாக ஆரம்ப கால சினைப்பசுக்களில் கருச்சிதைவு ஏற்படலாம். அத்துடன் மடி அழற்சி, மலட்டுத்தன்மை என்பன ஏற்படவும் வாய்ப்புக்கள் உண்டு.
நோய் எவ்வாறு பரவுகின்றது?
இந்நோய் நுளம்பு, இலையான், உண்ணிகள் மூலமே அதிகமாகக் கடத்தப்பட்டு தொற்று ஏற்படுகின்றது. எனினும் கால்வாய் நோய் பரவல் போன்று மனிதனாலும், வாகனங்களாலும் கடத்தப்படலாம்.
மேலும் மாடுகளை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்லும் போதும் மற்றும் நோய்த்தாக்கத்திற்கு உள்ளான மாடுகளின் உமிழ்நீர், சளி, பால், விந்து மூலமும் இந்நோய் பரவலடையலாம்.
இந்நோய் மனிதனில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதுடன் ஆடு, செம்மறி ஆகிய கால்நடைகளிலும் இந் நோய் ஏற்படாது என்பதுடன் மாடுகள், எருமைகள் மட்டுமே இந்நோயினால் பாதிக்கப்படும்.
இந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
1. இது ஒரு வைரஸ் நோய் என்பதனால் வேகமாக பரவக் கூடியது. எனவே இவ் நோயை கடத்துகின்ற நுளம்பு இலையான், உண்ணி ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
2. நோய் வாய்ப்பட்ட மாடுகளை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க வேண்டும்.
3. மனிதனும் இந் நோயை காவிச் செல்லும் காவியாக இருப்பதனால் பல்வேறு தேவைகளுக்காக மாடுகளுடன் தொடர்புபடும் மனிதர்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். கிருமி கொல்லியாக பொட்டாசியம் பேமங்கனேற்று (கொண்டிஸ்) பயன்படுத்தலாம்.
4. நோய் வாய்ப்பட்ட இடங்களில் இருந்து கால் நடைகளை எடுத்துச் செல்லல் தவிர்க்கப்படல் வேண்டும்.
5. பால் கொள்வனவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன் பால் கான்கள், பால் சேகரிப்பு வாகனங்கள் என்பன உரிய முறையில் கிருமித் தொற்று செய்யப்படல் வேண்டும்.
6. கால்நடை வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று பொருத்தமான சிகிச்சை வழங்குவதன் மூலம் இரண்டாம் நிலை தொற்றைக் கட்டுப்படுத்தி விரைவில் குணமடையச் செய்யலாம்.
மேலும் இந்நோயை கட்டுப்படுத்துவதற்காக மரபு சார் மூலிகை மருத்துவமும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதனை பண்ணையாளர்கள் அனுபவரீதியாக உறுதிப்படுத்தப்படுத்தியுள்ளனர்.
வாய்மூலம் கொடுக்கவேண்டிய மருந்து
வெற்றிலை– 10
மிளகு– 01 கரண்டி (10g)
உப்பு- 01 கரண்டி (10g)
சர்க்கரை- 01 கட்டி
மேற்கூறப்பட்ட பொருட்களை சேர்த்து அரைத்து நோய்வாய்ப்பட்ட மாட்டின் நாக்கில் 1ம் நாள் 03 மணித்தியாலத்திற்கு ஒரு தடவையும் 2ம் நாளில் இருந்து நாள் ஒன்றிற்கு 03 தடவை என்றவாறு ஒரு கிழமைக்கு தொடர்ச்சியாகப் பூசுவதன் மூலம் இந் நோயை விரைவில் குணமாக்கலாம்.
மாட்டின் வெளிப்புற உடலில் தோன்றும் கட்டிகளுக்கும், வீக்கத்திற்கும் பின்வரும் மூலிகைகள் கொண்ட எண்ணெய் தயாரித்துப் பூசுவதன் மூலம் சிறந்த பயனை பண்ணையாளர்கள் பெற்று வருகின்றனர்.
வேப்பிலை– 01 கைப்பிடி
துளசி இலை– 01 கைப்பிடி
குப்பைமேனி இலை - 01 கைப்பிடி
மருதானி இலை– 01 கைப்பிடி
மஞ்சள் தூள் - 01 தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) – 10 பல்லு
மேற்கூறப்பட்ட பொருட்களை அரைத்துப் பின்னர் அதை ½ ட தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்துக் காய்ச்சி வடித்து கட்டிகளிற்கும், வீக்கத்திற்கும் பூசுவதன் மூலம் விரைவில் குணமடையச் செய்யலாம்.
மேலும் இந்நோயைக் கடத்தலில் நுளம்பு, இலையான், உண்ணி முக்கிய பங்கு வகிப்பதனால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான பொதுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பின்வரும் எண்ணெய்களை சம அளவில் கலந்து பெறப்படும் கலவையை மாடுகளில் நீளப்பாட்டில் சிறிய தூரிகை கொண்டு காலை, மாலையில் கோடுகளாகக் கீறிவிடுதல் மூலம் நல்ல பயனைப் பெறமுடியும்.
• தேங்காய் எண்ணெய்
• வேப்பம் எண்ணெய்
• புங்கம் எண்ணெய்
மேற்படி மரபு சார் மருத்துவங்கள் வருமுன் காக்கும் மருந்துகளாகவும் பயன்படுத்த முடியும். எனவே எமது மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் இவ் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் பண்ணையாளர்களின் பங்களிப்பு மிக அதிகளவில் இருக்குமாயின் எம்மால் இந்நோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும்.
வைத்திய கலாநிதி
சுப்பிரமணியம் கஜறஞ்சன்
கால்நடை வைத்திய அதிகாரி
கிளிநொச்சி.