வடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ...
வடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
வட்டுக்கோட்டையில் இராணுவத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குளம் ஒன்றை திறப்பதற்காக இன்று யாழ்ப்பாணம் வந்த போதே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் பிரதேசத்திலுள்ள மக்களின் விவசாயத்தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த குளத்தினை இராணுவத்தினர் புனரமைத்துள்ளார்கள்.
அது இன்று மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களின் விவசாயத்துறையை விருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணக்கருவுக்கு அமைவாக வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் பல்வேறு விவசாய அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதேபோல யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் 600 விவசாயிகள் பயன்பெறகூடிய இந்த குளமானது இன்று புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக இவ்வளவு காலமும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்நோக்கி வந்த நீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது எதிர்காலத்திலும் யாழ் மாவட்டத்தில் விவசாய துறையை விருத்தி செய்வதற்கு இராணுவத்தினர் தமது முழு பங்களிப்பினை வழங்குவார்கள்.
இது மட்டுமல்லாது தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு பிரதேசம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது வருமானம் குறைந்தவர்களுக்கு 700க்கும் மேற்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் மேலும் பல வீடுகள் அமைக்கப்பட உள்ளன அதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது.
அத்தோடு வடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன உதாரணமாக அண்மையில் யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் அனர்த்தத்தின் போது இராணுவத்தினர் மனிதாபிமான உதவிகளை புரிந்திருக்கிறார்கள். தற்பொழுது இராணுவமானது நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் முகமாகவே செயற்பட்டு வருகின்றது எனவே எமது இராணுவ வீரர்கள் இந்த மனிதாபிமான செயற்பாடுகளை மக்களுக்கு செயல்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இவை இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது இங்கே ஒருவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை இராணுவத்தினர் கட்டுப்படுத்த வேண்டும் என ஒரு கோரிக்கையினை விடுத்திருந்தார் அதற்கிணங்க எதிர்காலத்தில் போலீசாருடன் இணைந்து ராணுவமும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுவார்கள்.
தற்போது யாழ் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது அனைவரும் அறிந்த விடயமே. எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதவாறு இராணுவம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.